karpooravalli leaves chutney recipe for cold

Karpooravalli Chutney : அடிக்கடி சளி பிடிக்குதா? வாரம் ஒரு முறை இப்படி கற்பூரவள்ளி சட்னி செய்து சாப்பிடுங்க!

உணவே மருந்து! சரியான உணவுகளை சாப்பிட்டாலே போதும் பல உடல் நல பிரச்சனைகளை தடுக்கலாம்.
Editorial
Updated:- 2023-06-14, 09:32 IST

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சனை சளி/ இருமல். பொதுவாக சளி மற்றும் இருமலில் இருந்து விடுபட பல வீட்டு வைத்தியங்களை நாம் முயற்சி செய்து இருப்போம். வீட்டு வைத்தியங்களை பற்றி பேசுகையில் கற்பூரவள்ளி இலைகளைப் பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது. இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. கற்பூரவள்ளி இலைகளை கொண்டு கஷாயம், ஜூஸ் அல்லது பஜ்ஜி செய்து சாப்பிடலாம்.

இன்றைய பதிவில் கற்பூரவள்ளி இலைகளைக் கொண்டு ஒரு ஆரோக்கியமான சட்னி ரெசிபியை பார்க்க போகிறோம். சளி, இருமல் வந்த பிறகு வீட்டு வைத்தியங்களை தேடுவதற்கு பதிலாக, வாரத்திற்கு ஒரு முறை இது போன்ற ஆரோக்கியமான விஷயங்களை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் பல உடல் நல பிரச்சனைகளை தடுக்கலாம். குழந்தைகளுக்கு செய்யும் பொழுது பச்சை மிளகாயின் அளவுகளை குறைத்துக் கொள்ளலாம். இந்த கற்பூரவள்ளி சட்னியை வாரம் ஒரு முறை செய்து சாப்பிட்டு வந்தால், அடிக்கடி சளி பிடிப்பதை தடுக்கலாம். சட்னி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்…

 

இந்த பதிவும் உதவலாம்: பாரம்பரிய சுவையில் அட்டகாசமான கோழி மிளகு பிரட்டல்

 

தேவையான பொருட்கள் 

chutney for idly dosa

  • கற்பூரவள்ளி இலை - 1 கப்
  • உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
  • கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் 2-3
  • துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன் 
  • கறிவேப்பிலை - 10-15
  • கொத்தமல்லி இலை - கைப்பிடி அளவு
  • எண்ணெய் - 2 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • தண்ணீர் - தேவையான அளவு  

தாளிப்பதற்கு தேவையானவை 

  • கடுகு - 1 டீஸ்பூன் 
  • கறிவேப்பிலை - சிறிதளவு 
  • காய்ந்த மிளகாய் 1-2 

செய்முறை 

karpooravalli chutney recipe

  • முதலில் கருவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் கற்பூரவள்ளி இலைகளை கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்து வைக்கவும். 
  • இப்போது கடாயை சூடாக்கி அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். இதனுடன் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக உடைத்து சேர்த்துக் கொள்ளவும். 
  • அடுத்ததாக கொத்தமல்லி மற்றும் கற்பூரவள்ளி இலைகளை சேர்க்கவும். இலைகள் சுருங்கி வரும் வரை வதக்க வேண்டும். 
  • வதக்கிய கலவை ஆறிய பிறகு தேங்காய் துருவல் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தண்ணீரை சேர்த்து அரைக்கவும். 
  • இப்போது ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஏற்றி கடுகு கருவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். தாளிப்பை சட்னியுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.  

சூடான இட்லி அல்லது தோசையுடன் சாப்பிட பிரமாதமாக இருக்கும். பல மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த கற்பூரவள்ளி சட்னியை நீங்களும் செய்து ருசித்து மகிழுங்கள்.

 

இந்த பதிவும் உதவலாம்: வெறும் 3 பொருட்கள் போதும், இனி வீட்டிலேயே சுவையான மேங்கோ ஐஸ்கிரீம் செய்யலாம்! 

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம். 

image source:freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com