பொங்கல் பண்டிகைக்கு சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், பொங்கல் சாம்பார், மெதுவடை, பருப்பு வடை, மொச்சை பொரியல், சேமியா பாயாசம், பருப்பு பாயாசம், ஜவ்வரிசி பாயாசம், இனிப்பு பணியாரம் போன்ற உணவுகளை ருசித்து மகிழ அவற்றின் செய்முறையைப் பகிர்ந்துள்ளோம். எனினும் தீபாவளியை போல் பொங்கல் பண்டிகைக்கும் தனித்துவமான பலகாரங்கள் உண்டு.
கரும்பு கடிப்பதற்கே நேரம் சரியாக இருக்கும். இதில் பலகாரமும் தேவையா என நீங்கள் சிந்திக்கலாம். ஆனால் தமிழரின் பாரம்பரியமான பண்டிகையான பொங்கல் அன்று பிறகும் நாம் தயாரித்த உணவு மற்றும் பழங்களை பகிர்ந்த அளிப்பதே அந்த பண்டிகையின் சிறப்பம்சமாகும். எனவே இரண்டு மூன்று பலகாரங்கள் செய்வதற்கு முன்கூட்டியே திட்டமிடுங்கள்.
அந்தவகையில் இன்று மொறுமொறு முறுக்கு எப்படி செய்வது என இங்கே பகிர்ந்துள்ளோம். பொங்கலுக்கு இனிப்பு மட்டுமே சாப்பிட்டு கொண்டு இருக்கிறோம் என நினைக்கும்போது முறுக்கை கடியுங்கள்.
முறுக்கு செய்யத் தேவையானவை
- பச்சரிசி
- உளுத்தம் பருப்பு
- ஓமம்
- பெருங்காயம்
- உப்பு
- வெண்ணெய்
- எண்ணெய்
செய்முறை
- பச்சரிசியை பயன்படுத்தும் முன்பாக அதில் கல், தூசி ஆகியவற்றை நன்கு தேடிப் பார்த்து எடுத்துவிடவும், அதே போல உளுத்தம் பருப்பும் தரமானதாக இருக்க வேண்டும். ஏனென்றால் அதுவே முறுக்கின் சுவையைத் தீர்மானிக்கும்
- முதலாவதாக ஒரு பேனில் 100 கிராம் உளுத்தம் பருப்பை போட்டு குறைந்த தீயில் அது பொன்னிறத்திற்கு மாறும் வரை வறுக்கவும்
- பச்சரிசியை அரைக்கும் முன்பாக அதைத் தண்ணீரில் ஊறவைத்து நன்கு கழுவி மீண்டும் காய வைக்கவும். ஒரு கிலோ பச்சரிசிக்கு 100 கிராம் உளுத்தம் பருப்பு தேவை.
- இவை இரண்டையும் சேர்த்து நீங்கள் வீட்டில் உள்ள மிக்ஸியிலேயே அரைக்கலாம் அல்லது மாவு மில்லில் கொடுத்து முறுக்கு மாவு அரைத்துவிடுங்கள்
- மாவில் கை வைக்கும் முன்னே கைகளை நன்கு கழுவி விடுங்கள். இப்போது மாவில் ஆறு ஸ்பூன் ஓமம், தேவையான அளவு உப்பு, ஒரு டீஸ்பூன் பெருங்காயம் சேர்க்கவும்
- இவை அனைத்தையும் சேர்த்த பிறகு மாவை நன்கு மிக்ஸ் செய்யவும்
- அடுத்ததாக மாவில் 150 கிராம் வெண்ணெய் சேர்க்க வேண்டும். வெண்ணெய்யை மிகவும் கெட்டியாகப் பயன்படுத்தக் கூடாது. சூரிய ஒளியில் காண்பித்து மாவில் வெண்ணெய் சேர்க்கவும்
- இதையடுத்து சப்பாத்தி மாவை பிசைவது போல் முறுக்கு மாவை பிசைய வேண்டும். தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாகவே சேர்ப்பது அவசியம். ஒரே நேரத்தில் மொத்தமாக தண்ணீர் ஊற்றிப் பிசையக் கூடாது
- முறுக்கு பிழிவதற்கு மாவு நன்கு மென்மையாக இருக்க வேண்டும்
- முறுக்கு சுடும் முன்பு முறுக்கு குழாயில் எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள். மாவை முறுக்கு குழுயில் போடும்போது அது பூ போல் மென்மையாக இருப்பதை நீங்கள் உணர வேண்டும். இல்லையெனில் முறுக்கு சுடுவது மிகவும் சிரமமாகி விடும்.
- முறுக்கு குழாயில் 80 விழுக்காடு அளவிற்கு மட்டுமே மாவை நிரப்புங்கள். அப்போது தான் முறுக்கு பிழிவதற்கு எளிதாக இருக்கும்.
- முறுக்கு மாவை நாம் நேரடியாக எண்ணெய்யில் பிழிய போவதில்லை. அதற்கு பதிலாகச் சின்னத் தட்டுகளை பயன்படுத்தப் போகிறோம்.
- தட்டை நன்கு கழுவி வட்டமாக இருக்கும் அதன் பின்புறத்தில் மாவை பிழியத் தொடங்குங்கள். நீங்கள் ஜல்லிக்கரண்டியும் பயன்படுத்தலாம்.
- மாவை பிழிந்து கொண்டே ரோல் செய்யக் கூடாது. மாவை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு பிழிந்து அதை ரோல் செய்யுங்கள் எளிதாக இருக்கும். ஒரு ரோலுக்கு இடையே அதிக இடைவெளி விட வேண்டாம். ஏனென்றால் முறுக்கு சுடும் போது போது மாவு தானாகவே இடைவெளி விடும்.
- தற்போது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு முறுக்கு மாவு வைத்திருக்கும் தட்டைக் கிட்டே எடுத்துச் சென்று எண்ணெய்யில் செலுத்தவும்
- முறுக்கு சுட்ட பிறகு அதை ஜல்லிக்கரண்டி பயன்படுத்தி எண்ணெய்யை விட்டு எடுக்கவும். நிச்சயமாக முறுக்கில் அதிக எண்ணெய் பிடித்திருக்காது.
நண்பர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் இந்த முறுக்கை பகிர்ந்து மகிழுங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation