ஆவக்காய் ஊறுகாய் ஆந்திராவில் மிகவும் பிரபலமானது. இதில் ஆவ என்ற வார்த்தை கடுகையும், காய் என்பது மாங்காயையும் குறிக்கின்றன. சமீபத்தில் நடிகை அனுப்பமா பரமேஸ்வரன் அவர்கள் ஆவக்காய் ஊறுகாய் தயாரிக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். அந்தப் பதிவை பார்த்தவர்களுக்கு ஆவக்காய் ஊறுகாயை செய்து ருசிக்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் வந்திருக்கும். எனவே, இன்றைய பதிவில் பாரம்பரியமான ஆவக்காய் ஊறுகாயின் செய்முறையை பார்க்கப் போகிறோம்.
நல்ல காரசாரமான இந்த ஊறுகாய் சைடு டிஷ் இல்லாத நாட்களில் நிச்சயம் கைகொடுக்கும். காரம் மற்றும் புளிப்பு சுவையின் கலவையான இந்த ஆவக்காய் ஊறுகாய் சப்பாத்தி முதல் தயிர் சாதம் வரை பல உணவுகளுக்கு பெஸ்ட் சைடு டிஷ் ஆக இருக்கும். பக்குவமாக வைத்துக்கொண்டால் 6 மாதம் வரை வைத்து ருசிக்கலாம். கடைகளில் வாங்கும் ஊறுகாய்களில் பிரிசர்வேட்டிவ்கள் சேர்க்கப்பட்டிருக்கும். இதற்கு பதிலாக சுகாதாரமான முறையில் நாமே வீட்டில் செய்தால் ஆரோக்கியத்திற்கு உகந்ததாக இருக்கும். மேலும், நிறைய பணத்தையும் மிச்சப்படுத்தலாம். ஆவக்காய் ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: வெறும் 2 பொருட்கள் போதும், சூப்பர் ஹெல்த்தியான ஆளி விதை பர்பியை இன்றே செய்து பாருங்கள்!
தேவையான பொருட்கள்
- மாங்காய் - 3
- மிளகாய் பொடி - 3/4 கப்
- கல் உப்பு - 1/4 கப்
- கடுகு - 1/2 கப்
- மஞ்சள் பொடி - 1/4 கப்
- வெந்தயம் - 2 டேபிள் டீஸ்பூன்
- நல்லெண்ணெய் - 1 கப்
- பெருங்காயம் - 1 டீஸ்பூன்
செய்முறை
- மாங்காயை கழுவி சுத்தம் செய்து கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். உங்களிடம் கூர்மையான கத்தி இருந்தால், விதையுடன் துண்டுகள் போட முயற்சி செய்யலாம்.
- நறுக்கிய மாங்காயை ஒரு வெள்ளை துணியில் பரப்பி, காற்றோட்டமான பகுதியில் வைத்து காய வைக்கவும்.ங்காய் ஈரப்பதத்துடன் இருந்தால் சீக்கிரம் கெட்டுவிடும். ஆகையால், இதை இரண்டு நாட்கள் வரை உலர வைக்க வேண்டும்.
- இப்போது ஊறுகாய்க்கான மசாலா அரைத்து கொள்ளலாம். கடாயை சூடாக்கி அதில் கடுகை மற்றும் வெந்தயம் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும். 1-2 நிமிடங்கள் வறுத்தால் போதுமானது .
- இக்கலவை நன்கு ஆறியபிறகு கல் உப்புடன் சேர்த்து நன்கு பொடித்து கொள்ளவும்.
- இப்போது ஒரு அகண்ட பாத்திரத்தில் அரைத்து வைத்த ஊறுகாய் மசாலா, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, பெருங்காயம் மற்றும் உலர்ந்த மாங்காய் சேர்த்து கலக்கவும். நீங்கள் பயன்படுத்தும் கரண்டி ஈரம் இல்லாமல் இருக்க வேண்டும்.
- இப்போது ஒரு கண்ணாடி அல்லது ஊறுகாய் ஜாடியில் ஊறுகாய் கலவையை கொஞ்சமாக சேர்க்கவும். இதன் மீது கொஞ்சம் நல்லெண்ணையை ஊற்ற வேண்டும்.
- அடுத்ததாக மீண்டும் மாங்காயை சேர்க்கவும். பின்பு நல்லெண்ணையை சேர்த்து கிளறி வெயிலில் வைக்கவும்.
- 2-3 நாட்களுக்கு வெயிலில் வைக்கவும். மூன்று நாட்களுக்குப் பிறகு எண்ணெய் பிரிந்து மேலே வர வேண்டும். தேவைப்பட்டால் கூடுதலாக நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.
- இந்த சமயத்தில் உப்பு மற்றும் காரத்தை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
- ஒரு வாரத்திற்கு பிறகு ஊறுகாயை பயன்படுத்தலாம். உப்பு, காரம் எல்லாம் ஊறி சாப்பிட அற்புதமான இருக்கும்.
- இந்த ஆவக்காய் ஊறுகாய் ரெசிபியை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். இந்தக் கோடை காலத்தில் நல்ல காரசாரமான ஆவக்காய் ஊறுகாயை செய்து சேமித்து வைத்து கொள்வோம்.
இந்த பதிவும் உதவலாம்: இப்படி மோர் குழம்பு வெச்சு பாருங்க, 4 நாளைக்கு உங்க குழம்பு பத்தி மட்டும் தான் பேசுவாங்க!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation