எம்.எல்.ஏக்களை காணோம்! இறங்கி வேலை செய்யுங்க - நடிகர் விஷால் அதிரடி

சென்னையில் வெள்ளைநீரை வடிய வைக்க செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து தமிழக அரசை நடிகர் விஷால் கடுமையாக சாடியுள்ளார். 

card vishal

மிக்ஜாம் புயலால் சென்னையில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. சென்னை மட்டுமல்ல திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நகரங்களிலும் இதே நிலை தான். சுமார் 30 மணி நேரத்திற்கு மேலாக கொட்டித் தீர்த்த மழையினால் அனைத்து தாழ்வான பகுதிகளும் மூழ்கிவிட்டன். லட்சக்கணக்கான வீடுகளைச் சுமார் 2 அடிக்குத் தண்ணீர் சூழந்துள்ளது.

இந்த நிலையில் நடிகர் விஷால் தமிழக அரசுக்கும், சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கும் ஒரு முக்கிய வேண்டுகோளை முன்வைத்து எக்ஸ் வலைதளத்தில் காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :

எல்லோருக்கும் வணக்கம், தற்போது நடந்து கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் காரணமாக மின் விநியோகம் தடைபட்டுள்ளது. தண்ணீர் தேங்கி நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. அண்ணா நகரில் இருக்கும் எனது வீட்டில் ஒரு அடிக்கு மேல் தண்ணீர் வந்துவிட்டது.

அண்ணா நகரிலேயே இந்த நிலைமை என்றால் பிற பகுதிகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது. தாழ்வான பகுதிகளின் நிலைமையை நினைத்துக் கவலைப்படுகிறேன். 2015ல் இதே போன்ற நிலைமை ஏற்பட்டபோது அனைவரும் களத்தில் இறங்கி வேலை செய்து பொதுமக்களுக்கு உதவினோம். தற்போது எட்டு வருடங்கள் கழித்து நிலைமை அதைவிட மோசமாக உள்ளது.

மேலும் படிங்கசென்னை மக்கள் கவனத்திற்கு! மழைக்கால நோய்களை தவிர்த்திடுங்கள்

மழைநீர் வடிகால் திட்டம் எங்கே ?

மழைநீர் சேமிப்பு மற்றும் மழைநீர் வடிகால் திட்டங்கள் என்ன ஆனது என்ற கேள்வி எழுகிறது. சென்னை மாநகராட்சி அறிவித்த திட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்பட்டதா எனத் தெரியவில்லை. எங்கே ஆரம்பித்தார்கள் எங்கே முடித்தார்கள் எனத் தெரியவில்லை. நடிகனாக இந்த வேண்டுகோளை விடுக்கவில்லை ஒரு வாக்காளனாக சில கேள்விகளைக் கேட்கிறேன்.

 vishal

சென்னை தொகுதிகளின் அனைத்து எம்.எல்.ஏக்களும் வெளியே வந்து இந்தப் பிரச்சினையைச் சரி செய்ய வேண்டும். பொதுமக்களுக்குச் சேவை செய்ய முதலில் வெளியே வாருங்கள். உங்கள் தொகுதிக்குச் செல்லுங்கள். நீங்கள் வெளியே வந்து பணியாற்றினால் தான் மக்கள் நம்பிக்கை பெறுவார்கள். குழந்தைகள், தாய்மார்கள், முதியவர்கள் என அனைவரும் பயந்து போய் இருக்கின்றனர்.

மேலும் படிங்கபாட்டி வைத்தியம் : இருமலை விரட்டியடிக்கும் இஞ்சி தண்ணீர்!

உடனடி நடவடிக்கை தேவை

இது ஒரு பொதுப் பிரச்சனை. அரசியல் நோக்கத்தில் இதை நான் பேசவில்லை. சென்னையில் மழைநீர் தேங்குவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. எல்லா இடத்திலும் தண்ணீர் தேங்குவது தர்ம சங்கடமான மற்றும் கேவலமான விஷயமாக நான் பார்க்கிறேன். தயவு செய்து உடனடி நடவடிக்கை எடுங்கள்.

சென்னை மாநகராட்சி ஊழியர்கள், அரசு அதிகாரிகள் அனைவரும் களத்தில் இறங்கி பணி செய்யக் கோரிக்கை வைக்கிறேன். இறங்கி வேலை செய்தால் நன்றாக இருக்கும். இது ஒரு மிக முக்கியமான பதிவு. வரி கட்டுகிறோம்… எதற்காக வரி கட்டுகிறோம் என அரசாங்கத்தை நோக்கி கேள்வி கேட்க வைத்து விடாதீர்கள். தொகுதிக்கு எம்.எல்.ஏ வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதனால் இந்த நேரத்தில் உங்கள் முகம் தெரிவது அவசியம் எனத் விஷால் கூறியுள்ளார்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP