கோயம்புத்தூர் மக்களுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளில் சிக்கன் சிந்தாமணியும் ஒன்று. நம்மில் பலரும் தயிர் சாதத்திற்கு சைடிஷாக எடுத்துக் கொள்வது ஊறுக்காய், உருளைக்கிழங்கு வறுவல் அதிகபட்சமாக சிப்ஸ். ஆனால் கோவை மக்களோ தயிர் சாதத்திற்காகவே சிக்கன் சிந்தாமணியை செய்வார்களாம். அந்த அளவுக்கு சாதம், கஞ்சி, தோசையென எல்லா வகையான உணவுகளுக்கும் சிறந்த சைடிஷாக சிக்கன் சிந்தாமணி பொருந்துகிறது.
இதில் மசாலா பொடி எதுவும் சேர்க்காமல் காரம் மட்டும் தூக்கலாக இருக்கும். அதற்கு காரணம் அவர்கள் சேர்க்கும் மிளகாயின் சுவை. சிக்கன் என்றாலே சூடு என்பார்கள். ஆனால், சிக்கன் சிந்தாமணி மட்டும் உடலுக்கு சூடே கிடையாது. காரணம் அதை மண் சட்டியில், நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் ஊற்றி சமைப்பார்கள். ஈரோடுவாசிகள் சிக்கன் சிந்தாமணியை மிளகாய் கறி எனவும் அழைப்பார்கள். எப்போதுமே சிக்கனை வைத்து வறுவல், தொக்கு, பிரட்டல் என ஒரே மாதிரியான ரெசிபிக்களை சமைத்து கொண்டிருப்பவர்கள் இந்த வாரம் சன்டே சமையலில் சிக்கன் சிந்தாமணியை சமைத்து பாருங்கள். வீட்டில் இருப்பவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.
சிக்கன் சிந்தாமணி செய்முறையை இப்போது விரிவாகப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- நாட்டுக்கோழி – 1.1/2 கிலோ
- கடலை எண்ணெய் – 50 மிலி
- கறிவேப்பிலை – தேவையான அளவு
- சின்ன வெங்காயம் – 250 கிராம்
- சிவப்பு மிளகாய் – 150 கிராம்
- உப்பு – தேவையான அளவு
- பூண்டு – 10
- தக்காளி – 2
- தேங்காய் துண்டுகள் – 2 கைபிடி அளவு
- சீரகம் – 2 ஸ்பூன்
- நல்லெண்ணெய் – 5 ஸ்பூன்
செய்முறை
- சிக்கன் சிந்தாமணியை மண்சட்டியில் சமைத்தால் மட்டுமே அதன் பாரம்பரிய சுவை கிடைக்கும்.
- அடுப்பில் சட்டியை வைத்து அதில் கடலை எண்ணெய் ஊற்றி சூடுப்படுத்தவும்.
- பின்பு அதில் காம்பு மற்றும் விதை நீக்கிய காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு வறுக்கவும்.
- இப்போது அதில் சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் இடித்த பூண்டை சேர்த்து வதக்கவும்.
- பின்பு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, அதில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
இந்த பதிவும் உதவலாம்: செட்டிநாடு ஸ்டைல் குழிப்பணியாரம் செய்வது எப்படி?
- தேவையான அளவு உப்பு சேர்த்து விட்டு, காரமும் சரியாக இருக்கிறதாக என ஒருமுறை ருசிப்பார்க்கவும். பிறகு தண்ணீர் சேர்த்து சிக்கனை 15 நிமிடம் வேக வைக்கவும்.
- இப்போது இளசான தேங்காய் துண்டுகள், இடித்த சீரகம் சேர்த்து நன்கு கிளறவும்.
- மீண்டும் 15 நிமிடத்திற்கு சிக்கனை சுண்ட வேக விடவும். இறுதியாக நல்லெண்ணெய் சேர்த்து கறிவேப்பிலையை தூவவும்.
- அடுப்பை அணைத்து விட்டு சுடச்சுட பரிமாறலாம். சுவையான கொங்கு மண்டலம் ஸ்பெஷல் சிக்கன் சிந்தாமணி தயார்.
குறிப்பு: சிக்கன் சிந்தாமணியை நாட்டு கோழியில் செய்தால் தான் அதன் பாரம்பரிய ருசி கிடைக்கும். ஒருவேளை நீங்கள் பிராய்லர் கோழி பயன்படுத்தினால், சிக்கனை வேக வைக்கத் தண்ணீர் சேர்க்க கூடாது. அடுப்பை மிதமான தீயில் வைத்து சிக்கனை வேக வைக்கவும்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation