இட்லி, தோசை முதல் சாம்பார் வரை தென்னிந்திய உணவு வகைகள் அனைத்தும் ஆரோக்கியம் நிறைந்தாகக் கருதப்படுகிறது. ஆவியில் வேக வைக்கும் இட்லியை காலை உணவாக எடுத்துக் கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது என்கின்றனர் மருத்துவர்கள். தமிழர்கள் காலை உணவுக்கு முக்கியத்தும் கொடுப்பது போல மாலை நேர டிபனும் அவர்களின் வாழ்வியலுடன் கலந்து விட்டது. ஒரு சில நகரங்களில் மாலை நேர டிபன் பழக்கம் இல்லாமல் இருக்கலாம். அதிகப்பட்சமாக வடை, சமோசா, பஜ்ஜி இதை சாப்பிட்டு விட்டு டீ குடிக்கும் பழக்கம் இருக்கலாம்.
ஆனால் காரைக்குடி, கோயம்புத்தூர், திருச்சி பக்கம் ஒவ்வொரு வீடுகளிலும் கட்டாயம் மாலை நேர டிபன் தயார் செய்யப்படும். ஒரு 5 மணிபோல் சரியாக, டீ குடிப்பதற்கு முன்பு சுடசுட பணியாரம், அடை, ராகி தோசை, சுண்டல் என தினமும் விதவிதமான மெனு மாலை நேர டிபனில் இடம்பெறும். அதிலும் பணியாரத்தில் இனிப்பு, காரம், முட்டை பணியாரம் என சொல்லிக் கொண்டே போகலாம்.
இந்த பதிவை வாசிக்கும் போது பணியாரம் நம் கண்முன் வந்து போகலாம். அப்படி பணியாரம் சாப்பிட ஆசைப்படுபவர்கள் இந்த செய்முறையைப் பின்பற்றி வீட்டிலேயே செட்டிநாடு குழிப்பணியாரம் செய்து அசத்துங்கள். ஸ்கூல், காலேஜ் விட்டுப் பிள்ளைகள் நேராக வீட்டுக்கு வரும்போது இந்த பணியாரத்தை சுடசுட தட்டில் போட்டுக் கொடுத்தால் அடுத்தமுறை கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். உடலுக்கு நல்லதும் கூட.
மாவு தயாரிக்கும் முறை
சாஃப்டான பஞ்சு போன்ற குழிப்பணியாரத்துக்கு எப்போதுமே மாவை சரியான பக்குவத்தில் அரைத்து அதை புளிக்க வைக்க வேண்டும். இப்படி செய்தால் தான் ருசியான பணியாரம் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி – 1 கப்
- இட்லி அரிசி – 1 கப்
- உளுந்து – ½ கப்
- வெந்தயம் – ½ டீஸ்பூன்
செய்முறை
- முதலில் பச்சரிசி, இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம், ஆகியவற்றை அலசி, பின்பு அதில் தண்ணீர் ஊற்றி 3-4 மணிநேரம் ஊற வைக்கவும்.
- இப்போது இவற்றை மிக்ஸி அல்லது கிரைண்டரில் சேர்த்து இட்லி தோசை மாவு பதத்திற்கு மைய அரைத்துக் கொள்ளவும். (தண்ணீர் நிறைய சேர்க்க கூடாது)
- இறுதியாக மாவில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து 8 மணி நேரம் அப்படியே வைக்கவும். இப்படி செய்யும்போது மாவு நன்கு புளித்து மேலே பொங்கி வரும்.
- இப்போது தேவையான அளவு மாவை மட்டும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
செட்டிநாடு குழிப்பணியாரம் செய்முறை
தேவையான பொருட்கள்
- எண்ணெய் – 1 டீஸ்பூன்
- கடுகு – ¼ டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – ½ டீஸ்பூன்
- கடலைப் பருப்பு – ½ டீஸ்பூன்
- பெரிய வெங்காயம் – ½
- கறிவேப்பிலை – தேவையான அளவு
- காய்ந்த மிளகாய் – 1
- பச்சை மிளகாய் – காரத்திற்கு ஏற்ப
- உப்பு – தேவையான அளவு
- கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
- முதலில் அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடுப்படுத்தவும்.
- பின்பு அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
- இப்போது அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
- இறுதியாகக் கொத்தமல்லி தூவி அடுப்பை அணைக்கவும்.
- தாளித்த வெங்காய கலவையை அரைத்து வைத்துள்ள மாவில் கொட்டி நன்கு கலந்து கொள்ளவும்.
- இப்போது அடுப்பில் பணியார சட்டியை வைத்துக் குழியில் எண்ணெய் ஊற்றி சூடுப்படுத்தவும்.
இந்த பதிவும் உதவலாம்: கோவில் பிரசாத சுவையில் காஞ்சிபுரம் இட்லி செய்வது எப்படி?
- அடுத்து அதில் மாவை பக்குவமாய் ஊற்ற வேண்டும். ஒவ்வொரு குழியிலும் நிறைய மாவை ஊற்றக் கூடாது. பணியாரக்குழி முக்கால் அளவு நிரம்பும் வரை மாவை ஊற்றினால் போதும்.
- பின்பு பணியாரத்தை இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டுப் பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும்.
- இப்போது தட்டில் வைத்துப் பரிமாறினால் சூப்பரான செட்டிநாடு குழிப்பணியாரம் தயார். கார சட்னி, கடலை சட்டினியுடன் பணியாரத்தை சாப்பிட்டால் டேஸ்ட் அருமையாக இருக்கும்.
- நீங்களும் இந்த செய்முறையைப் பின்பற்றி வீட்டிலேயே குழிப்பணியாரம் செய்து பிள்ளைகளுக்குக் கொடுங்கள். நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: Google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation