வரும் ஜனவரி 26ஆம் தேதியை ஒட்டுமொத்த இந்திய மக்களும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். இது இந்திய திருநாட்டின் மிகவும் முக்கியமான மற்றும் தேசப்பற்றை வெளிப்படுத்தும் நாட்களில் ஒன்றாகும். குடியரசு தின கொண்டாட்டமானது இந்தியாவின் வளமான வரலாறு மற்றும் ஜனநாயகக் கொள்கைகளுக்கான அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்.
இதையொட்டி நமது நாட்டின் தலைநகரான டெல்லியில் முப்படைகளின் அணிவகுப்பு நடைபெறும். அதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு அரங்கேறும். இது ஒட்டுமொத்த இந்தியர்களுக்கான பெருமைக்கூரிய தருணம் மட்டுமின்றி நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி தங்களது உயிர்களை தியாகம் செய்த உள்ளங்களுக்கு நன்றி செலுத்தும் நிகழ்வாகும்.
குடியரசு தினம் 2024 : தீம்
இந்தாண்டு குடியரசு தினத்தின் கருப்பொருள் இந்தியா - ஜனநாயகத்தின் தாய் மற்றும் விக்சித் பாரத் ஆகும். 2047ல் நாடு சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகளை நிறைவு செய்யும் போது அனைத்து விதமான வளர்ச்சியையும் உள்ளடக்கிய வல்லரசாகவும் தன்னிறைவு பெற்ற நாடாகவும் இந்தியா திகழ வேண்டும் என்பது விக்சித் பாரத்திற்கான அர்த்தமாகும். இது ஒரு ஜனநாயக தேசமாக இந்தியாவின் பங்கையும் அதன் முன்னேற்றத்தையும் பிரதிபலிக்கிறது.
குடியரசு தினம் : வரலாறு
1950ஆம் ஆண்டு முன்பு வரை நமது நாடு பிரிட்டீஷின் இந்திய அரசமைப்பு சட்டத்தை (1935) பின்பற்றி வந்தது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு ஜனவரி 26 1950ஆம் ஆண்டு பிரிட்டீஷின் அரசமைப்பு சட்டம் கைவிடப்பட்டு இந்தியா தனக்கென அரசியலமைப்பை உருவாக்கி அதை ஏற்றுக்கொண்டது. இது இறையாண்மை கொண்ட குடியரசாக இந்தியா மாறுவதை குறிப்பிடுவதால் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.
இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தலைமையிலான குழுவுக்கு பெரும் பங்கு உண்டு. அதன் காரணமாகவே அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பின் தந்தை என போற்றப்படுகிறார். இந்தியாவின் அரசியலமைப்பு நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
மேலும் படிங்க குடியரசு தின விழாவிற்கான டிக்கெட்டை பெறும் வழிகள்
குடியரசு தினத்தின் முக்கியத்துவம்
இறையாண்மையுள்ள ஜனநாயகக் குடியரசாக இந்தியா உதயமானதை குடியரசு தினம் நமக்கு நினைவு கூர்கிறது. வரலாற்று முக்கியத்துவத்திற்கு அடுத்தபடியாக குடியரசு தினம் என்பது சுதந்திரம், உரிமைகள் மற்றும் கடமைகளின் கொண்டாட்டமாகும். குறிப்பாக வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் இந்தியாவின் இராணுவ வலிமையை உலகிற்கு வெளிப்படுத்தும் தருணமாகும்.
குடியரசு தின விழா 2024
இந்த ஆண்டு நமது தேசம் 75வது குடியரசு தினத்தைக் கொண்டாடும் நிலையில் குடியரசு தின நிகழ்ச்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ள கொண்டாட்டங்களை பொதுமக்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். ராஜ பாதையில் சரியாகக் காலை 9.30 மணிக்கு கண்கவர் அணிவகுப்பு தொடங்கும்.
இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றுவார். அதன் பிறகு கலாசார நிகழ்ச்சிகள், முப்படைகளின் அணிவகுப்பு மற்றும் பல்வேறு அதிநவீன ஆயுதங்களின் காட்சி ஆகியவை நடைபெறும். இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
டெல்லியில் மட்டுமல்ல அனைத்து மாநில அரசுகளின் சார்பாகவும் இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்படும். சிறப்பு விருந்தினரை அழைத்து தேசியக் கொடியை ஏற்றுவது, அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் பேச்சுப் போட்டி போன்ற நிகழ்வுகள் இந்த நாளில் நடத்தப்படும்.
மேலும் படிங்கபாரதத்தின் 75வது குடியரசு தினம்! அன்புக்குரியவர்களுக்கு பகிர்வதற்கான வாழ்த்து
இதில் மாணவர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்தும் விதமாகப் பாடல்கள் பாடி, நடனமாடி, நாடகங்களில் நடித்து மூலம் விழாவை சிறப்பிப்பர். இந்திய அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி சிந்திக்க மாணவர்களுக்கு ஒரு தளமாகவும் குடியரசு தின கொண்டாட்டம் அமைகிறது.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation