பி.வி.சிந்துவுக்கு டிசம்பர் 22ல் திருமணம்; மாப்பிள்ளை யார் தெரியுமா ?

ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்றவரான பேட்மிண்டன் வீராங்னை பி.வி.சிந்து இந்த டிசம்பரில் திருமணம் செய்யவிருக்கிறார். ஐதராபாத்தை சேர்ந்த வெங்கட தத்தா சாய் என்பவரை கரம் பிடிக்கிறார். உதய்பூரில் டிசம்பர் 22ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளது.
image

2016 ரியோ ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளி, 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து போஸிடெக்ஸ் டெக்னாலஜியின் நிர்வாக இயக்குநரான வெங்கட தத்தா சாய் என்பவரை திருமணம் செய்யவுள்ளார். சமீபத்தில் சிந்து லக்னோவில் நடைபெற்ற சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருமண நிகழ்வு டிசம்பர் 20ஆம் தேதி தொடங்கும் எனவும் உதய்பூரில் டிசம்பர் 22ஆம் தேதி திருமணம் நடைபெறும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 24ஆம் தேதி ஐதராபாத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என பி.வி.சிந்துவின் தந்தை பி.வி.ரமணா கூறியுள்ளார். இரு குடும்பத்தினரும் ஒரு மாதத்திற்கு முன்பாகவே இதை முடிவு செய்துவிட்டாலும் தற்போது அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளனர். திருமணம் முடிந்த கையோடு சிந்து பேட்மிண்டன் களம் திரும்புகிறார்.

பி.வி.சிந்து திருமணம்

29வயதான சிந்துவின் ஆட்டத்திறன் கடந்த சில ஆண்டுகளில் குறைந்த காரணத்தால் பாரிஸ் ஒலிம்பிக்கில் கூட பதக்கம் வெல்ல முடியாமல் போனது. இந்த நிலையில் சுமார் 2 வருடங்களுக்கு பிறகு சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடரில் சீன வீராங்கனையை வீழ்த்தி பட்டம் வென்றார். 2017, 2022ஆம் ஆண்டுகளிலும் சிந்து இதே தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இந்த வெற்றி தனக்கு நம்பிக்கை அளிப்பதாக சிந்து கூறிய நிலையில் திருமண அறிவிப்பு வெளியாகியுள்ளது. வெங்கட தத்தா சாய் பிபிஏ பயின்றவர். பெங்களூருவில் உயர் படிப்பையும் முடித்தவர். இது காதல் திருமணமா என உறுதியான தகவல்கள் இல்லை. எனினும் இருவரும் ஒருவரை ஒருவர் முன்கூட்டியே தெரிந்திருக்கிறார்கள்.

வெங்கட தத்தா சாய்

ஐபிஎல் கிரிக்கெட்டிற்கும் வெங்கட தத்தா சாய்க்கும் தொடர்பு உண்டு. நிதி நிர்வாகத்தில் வெங்கட தத்தா சாய் கைதேர்ந்தவர் என கூறப்படுகிறது. JSW நிறுவனத்தில் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். 2019ஆம் ஆண்டு முதல் போஸிடெக்ஸில் நிர்வாக இயக்குநராக உள்ளார். நிதி நிர்வாகத்திற்கு தேவையான விஷயங்களை ஆராய்ச்சி செய்வதில் வெங்கட தத்தா சாய் முக்கிய பங்காற்றியுள்ளார். ஹெச்.டி.எப்.சி மற்றும் ஐசிஐசிஐ போன்ற வங்கிகளுக்கும் இவருடைய கண்டுபிடிப்புகள் உதவியுள்ளன.

மேலும் படிங்ககீர்த்தி சுரேஷின் 15 வருட காதல்; டிசம்பரில் ஆண்டனி தட்டிலுடன் டும் டும் டும்

திருமணத்திற்கு பிறகும் பி.வி.சிந்து தொடர்ந்து விளையாடுவார் என கூறப்படுகிறது. 2028ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு அவர் தன்னை தயார்படுத்திக் கொள்ளலாம் என்று நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP