இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள நாகர்கோவில் இயற்கை அழகுக்கு பெயர் போனது. சுற்றுலா பயணிகளுக்குச் சொர்க்க பூமியாகத் திகழும் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா திருக்கோவில் வரலாற்று சிறப்புமிக்க தொன்மையான கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலுக்குத் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளாவை சார்ந்தவர்கள், வட இந்தியர்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பல தரப்பட்ட மக்களும் வந்து சாமி தரிசனம் செய்து விட்டுச் செல்வார்கள்.
நாகர்கோவில் உணவுமுறையில் கடல் சார்ந்த உணவுகளுக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். நாகர்கோவில் மக்கள், சாளை மீன் குழம்பு வைத்தால் தெருவே மணக்குமாம். கிழங்கும், மீனும் இவர்களின் பிரதான உணவு பட்டியலில் இருப்பதால் சுற்றுலா பயணிகளும் நாகர்கோவில் சென்றால் வித்தியாசமான கடல் உணவுகளை ருசி பார்க்கவே அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். அதே போல் குறிப்பிட்ட சில உணவுகளைத் தேங்காய் எண்ணெயில் சமைப்பதும் நாகர்கோவில் மக்களின் ஸ்பெஷல்.
அந்த பட்டியலில் முதல் இடம்பிடிப்பது நாகர்கோவில் அவியல். அவியலில் பலவகையுண்டு. தயிர் சேர்த்த அவியல், தயிர் சேர்க்காத தேங்காய் அவியல், மலபார் அவியல், திருநெல்வேலி அவியல் என ஊருக்கு ஏற்றார் போல் அவியல் செய்முறை மாறும். கேரளாவுக்கு அடுத்தப்படியாகத் தமிழகத்தின் நாகர்கோவில் அவியல் அனைவரும் விரும்பிச் சாப்பிடும் ஒன்றாக உள்ளது. வாரத்தில் ஒருமுறை நாகர்கோவில் மக்கள் அவியல் செய்வது உறுதி.
நீங்களும் அந்த அவியல் செய்முறையைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? செய்முறையை இங்கே பகிர்கிறோம் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
- மாங்காய் - 1
- வாழைக்காய் - 1
- முருங்கைக்காய் - 1
- கேரட் - 1
- பீன்ஸ் - 5
- கத்திரிக்காய் - 2
- வெள்ளரிக்காய் - 1
- புடலங்காய் - 1/2
- கருணைக்கிழங்கு - 1/2
- வெள்ளை பூசணிக்காய் - ½
- சின்ன வெங்காயம் - 4
- தேங்காய் எண்ணெய்
- சீரகம் – ½ டீஸ்பூன்
- பூண்டு – 2
- பச்சை மிளகாய் – 2
- மஞ்சள் தூள்
- கறிவேப்பிலை
- தேங்காய் – அரை மூடி
செய்முறை
- முதலில் காய்கறிகளைத் தண்ணீர் ஊற்றி நன்கு அலசி அதை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.
- பின்பு காய்கறிகளைக் கடாயில் போட்டு ½ கப் அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
- இதற்கிடையில் மசாலாவை அரைத்துக் கொள்ளவும். அதற்கு தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை எடுத்துக் கொள்ளவும்.
- இதை மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிப் பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும்.
- இப்போது அரைத்த மசாலாவை வேக வைத்த காய்கறிகளுடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி கலந்து விடவும்.
- மேலே கறிவேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். விருப்பப்பட்டால் தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலை தாளித்தும் இதில் சேர்க்கலாம்.
- மசாலா, காய்கறிகளுடன் நன்கு சேர்ந்து அவியல் பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்
- இப்போது சூப்பரான நாகர்கோவில் ஸ்பெஷல் அவியல் தயார்.
குறிப்பு: அவியலில் மாங்காய் சேர்க்காமல் இருந்தால் புளிப்புக்கு சிறிதளவு தயிர் சேர்த்து கொள்ளவும்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: Google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation