ஐஸ்கிரீம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் விருப்பமானது. இன்றும் ஐஸ்கிரீம் சாப்பிடும் பொழுது அனைவரும் குழந்தைகளாகவே மாறி விடுகிறோம். கோடையை சமாளிக்க ஒரு புறம் பருவக்கால பழங்களை சாப்பிட்டாலும் ஐஸ்கிரீமை மறந்துவிட முடியாது. ஆனால் கடையில் விற்கப்படும் ஐஸ்கிரீம்களை அடிக்கடி வாங்கி சாப்பிடுவது ஆரோக்கியமானது அல்ல.
கொழுப்புகள் அதிகம் சேர்க்கப்பட்டு விற்கப்படும் பல ஐஸ்கிரீம் வகைகளால் உங்கள் உடல் எடையும் அதிகரிக்கலாம். இதை தவிர்க்க ஆரோக்கியமான முறையில் நீங்களே வீட்டில் ஐஸ்கிரீம் செய்து சாப்பிடலாம். குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவை செய்து கொடுத்த திருப்தி உங்களுக்கு நிச்சயம் இருக்கும். இதை சுலபமாக வெறும் பத்து நிமிடத்தில் செய்திட முடியும். இதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: தேங்காய் சேர்க்காத கிராமத்து மட்டன் குழம்பு இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க!
தேவையான பொருட்கள்
- திக்கான பால் - ½ லிட்டர்
- சர்க்கரை - 1 கப்
- கோதுமை மாவு/ கார்ன் பிளவர் மாவு - 1 டீஸ்பூன்
- வெண்ணெய் - 1 டீஸ்பூன்
- பாதாம் - 10
- முந்திரி 10
செய்முறை
- முதலில் பாதாம் மற்றும் முந்திரியை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- அடுத்ததாக ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு சர்க்கரை சேர்த்து, தண்ணீர் எதுவும் சேர்க்காமல் கேரமலைஸ் செய்து கொள்ளவும்.
- சர்க்கரை உருகி தேனின் நிறத்திற்கு மாறிய பிறகு வெண்ணெய் சேர்த்து அடுப்பை அணைக்கவும். வீட்டில் வெண்ணெய் இல்லாத நிலையில் நெய்யும் பயன்படுத்தலாம்.
- உருகிய சர்க்கரை கெட்டியாக மாறுவதற்கு முன் நறுக்கிய பாதாம் மற்றும் முந்திரி சேர்த்து கிளறி, நெய் தடவிய தட்டில் பரப்பி, ஆறவிடவும்.
- இதனை ஆறியவுடன் லேசாக சிறிய துண்டுகளாக இடித்து வைத்துக் கொள்ளலாம்.
- இப்போது ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.
- பால் பொங்கி வரும் சமயத்தில் கோதுமை மாவை பால் அல்லது தண்ணீரில் கரைத்து கொதிக்கும் பாலுடன் சேர்த்து கலக்கவும்.
- குறைந்த தீயில் வைத்து பாலை நன்கு கிளறவும். சிறிது நேரத்தில் பால் இறுகி தோசை மாவு பதத்திற்கு திக்காக வரும். இந்த சமயத்தில் அடுப்பை அணைக்கவும்.
- பால் முழுவதும் ஆறிய பிறகு இதனை ஒரு ஐஸ்கிரீம் பாக்ஸ் அல்லது வேறு ஏதேனும் மூடியுள்ள பாத்திரத்தில் போட்டு ஃபிரீசரில் வைக்கவும்.
- 3-4 மணி நேரம் கழித்து, உறைய வைத்த ஐஸ்கிரீமை மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
- அரைத்த ஐஸ்கிரீமுடன் நுணுக்கி வைத்துள்ள கேரமல் நட்ஸ் கலவை சேர்த்து மீண்டும் ஃபிரீசரில் வைக்கவும்.
- இப்போது குறைந்தது 8 மணி நேரங்கள் அல்லது இரவு முழுவதும் உறைய வைக்கவும்.
- மறுநாள் காலையில் கேரமல் நட்ஸ் தூவி பரிமாறவும்.
இந்த அருமையான பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீமை நீங்களும் உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள். நிச்சயமாக உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் பாராட்டுவார்கள். ஆரோக்கியமான முறையில் இயற்கை பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஐஸ்கிரீமை எவ்வித தயக்கமும் இல்லாமல் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை கண்டறிவது எப்படி?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation