அதிக வெப்பம் காரணமாக புதிதாகப் பிறந்த குழந்தைகளின் வயிறு, மார்பு, கழுத்து மற்றும் பிட்டப்பகுதிகளில் சிவப்பு நிறத்தில் சிறு சிறு கொப்புளங்கள் போன்று வியர்க்குரு தோன்றலாம். குறிப்பாக கோடை காலங்களில் இது அதிகமாக ஏற்படும். குழந்தைகளின் தோல் மிகவும் மென்மையானது மற்றும் உணர்திறன் கொண்டதாக இருப்பதால், இந்த வியர்க்குரு அரிப்பு மற்றும் வறட்சியை ஏற்படுத்தி குழந்தைக்கு அசௌகரியத்தை கொடுக்கும். இதனால் குழந்தைகள் அழுதுக்கொண்டே இருப்பார்கள். எனவே பச்சிளம் குழந்தைக்கு வியர்க்குரு வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
வியர்க்குருவை எவ்வாறு தடுப்பது?
காற்றோட்டம் உள்ள ஆடைகளை அணியலாம்:
குழந்தைகளுக்கு வியர்வை அதிகம் ஏற்படுவதைத் தடுக்க, அவர்களின் உடல் பகுதிகளில் காற்று சுழலும் வகையில் மெல்லிய, தளர்வான பருத்தி ஆடைகளை அணிவிக்கவும். இறுக்கமான ஆடைகள் வியர்வையை சிக்க வைத்து, சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். குழந்தையின் ஆடைகள் ஈரமாகிவிட்டால் உடனடியாக மாற்றி விடவும்.
சருமத்தை உலரவைக்கவும்:
குழந்தையின் சருமம் அதிக ஈரப்பதமாக இருந்தால், அது வியர்க்குருவைத் தூண்டும். குளித்த பிறகோ அல்லது டயப்பர் மாற்றும்போதோ, குழந்தையின் உடல் முழுவதும் (குறிப்பாக கை, கழுத்து, தொடைப்பகுதி) நன்றாக உலர்ந்திருக்கும்படி கவனிக்கவும். இயற்கை மாய்ச்சுரைசர் பயன்படுத்தி சருமத்தின் ஈரப்பதத்தை சமநிலைப்படுத்தலாம்.
குளிர்ந்த துணியால் துடைக்கவும்:
குழந்தையின் உடல் சூடாகிவிட்டால், ஒரு மெல்லிய பருத்தி துணியை குளிர்ந்த நீரில் நனைத்து, வியர்வை படிந்த இடங்களை மெதுவாகத் துடைக்க வேண்டும். இது குழந்தையின் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.
டயப்பரைக் குறைந்தபட்சமாகப் பயன்படுத்தவும்:
குழந்தைகளுக்கு டயப்பர்கள் சருமத்தின் வெப்பத்தை அதிகரித்து, வியர்க்குருவை ஏற்படுத்தும். எனவே, முடிந்தவரை டயப்பர் பயன்படுத்தாமல், பருத்தி துணியை லங்கோட் போல் கட்டி பயன்படுத்தலாம். ஒவ்வொரு முறை உங்கள் குழந்தை சிறுநீர் அல்லது மலம் கழித்தவுடன், சுத்தமான துணியால் துடைத்து உலர வைக்கவும்.
சரியான நேரத்தில் குளிப்பாட்டவும்:
கோடையில் குழந்தையை காலையில் 10 மணிக்கு முன்பும், மாலை 4 அல்லது 5 மணிக்கு இடையிலும் வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்டுங்கள். மிகவும் வெப்பமான நேரங்களில் குளிப்பாட்டாமல், ஈரத் துணியால் உடலைத் துடைத்து குளிர்ச்சியாக வைத்திருக்கலாம்.
வெயிலில் வெளியே அழைத்து செல்லாதீர்கள்:
குழந்தையை நேரடியாக வெயிலில் வெளியே கொண்டு செல்லாமல், குளிர்ந்த, நிழலான இடங்களில் வைக்கவும். வீட்டில் காற்றோட்டம் நல்ல முறையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.
குறிப்பு:
- வியர்க்குரு தவிர குழந்தையின் சருமத்தில் சிவப்பு தடிப்புகள் தென்பட்டால், சந்தனத்தை நீரில் கலந்து பூசி குளிப்பாட்டலாம்.
- குழந்தையின் உடலில் அதிகப்படியான பவுடர் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
- குழந்தை எப்போதும் நீரிழப்பு அடையாமல் இருக்க பால் மற்றும் தண்ணீர் கொடுத்து பராமரிக்கவும்.
- இந்த எளிய முறைகளைப் பின்பற்றினால், உங்கள் வீட்டில் இருக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு வியர்க்குரு வராமல் பாதுகாப்பாக வைத்திருக்கலாம்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation