குளிர்காலம் வந்துவிட்டது, இந்த சமயத்தில் நமக்குப் போர்வையை விட்டு வெளியேரவே மனமிருக்காது. என்னைப் போன்ற ஒரு சிலர் டீ முதல் சாப்பாடு வரை அனைத்தையும் போர்வைக்குள் இருந்தபடியே சாப்பிட்டு சோம்பேறிகளாகி விடுகிறார்கள். இந்தப் பருவத்தில், தினசரி வேலை செய்வது கூட மிகவும் கடினமாகத் தோன்றும், குறிப்பாக நோய்வாய்ப்பட்டால், நமக்கு வேலையும் செய்யப் பிடிக்காது. அடிக்கடி மருந்துகள் எடுத்துக்கொள்வதால் பக்கவிளைவுகள் ஏற்படலாம். இந்த சூழலில், நம் முன்னோர்கள் குளிர்காலத்தில் பின்பற்றிய பல விதமான பாட்டி வைத்தியங்களை நாம் மறந்துவிடக் கூடாது.
குளிர்காலத்திற்கு சிறந்ததாகக் கருதப்படும் நான்கைந்து பாட்டி வைத்தியங்களை இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.
1. கடுகு எண்ணெய் பயன்படுத்தி சளியை நீக்கலாம்
கடுகு எண்ணெய் பல மருத்துவக் குணங்களை கொண்டுள்ளது. சமையல் முதல் சரும பராமரிப்பு வரை பல காரியங்களுக்காக இது பயன்படுத்தப்படுகிறது. சளி நிவாரணத்திற்காக நானும் இதை பயன்படுத்தியிருக்கிறேன். இதற்கு முதலில் கடுகு எண்ணெயை சூடாக்கி, அதில் சிறிது பூண்டு சேர்க்கவும் (இதை முழுமையாக சமைக்க வேண்டாம், 5-10 வினாடிகள் இருந்தால் போதுமானது). பூண்டிற்கு பதிலாக சிறிது வெந்தயமும் சேர்க்கலாம்.
இது பயன்படுத்தக்கூடிய வெப்ப நிலைக்கு வந்த பிறகு, உள்ளங்கால்களில் கதகதப்பாக தேய்க்கவும். இதன் மசாஜ் கால் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. மேலும் குளிர்ச்சியான உடல் தன்மை உடையவர்களுக்கு, குளிர்காலத்தில் இது நல்ல பயனளிக்கும். விருப்பப்பட்டால், இதற்குப் பிறகு காலுறைகளை அணிந்துகொள்ளலாம். இது இன்னும் கொஞ்சம் வசதியாக இருக்கும்.
2. நெஞ்சில் சளி இருப்பதை குணப்படுத்தும் கிராம்பு
நெஞ்சில் சளி இருந்தால், நீங்கள் சில தைலங்களை பயன்படுத்தியிருப்பீர்கள். அதற்கு பதிலாக இந்த பாட்டி வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள். தேங்காய் எண்ணெயை சூடாக்கி அதில் கிராம்பு சேர்க்கவும். சூடு தனிந்த பின் மார்பில் தடவலாம். நெஞ்சில் சளி இருப்பதை குறைக்க இது உதவியாக இருக்கும். தேங்காய் எண்ணெய் பிடிக்காதவர்கள் கடுகு எண்ணெயையும் பயன்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: மூக்கடைப்பிலிருந்து உடனடி நிவாரணம் பெற வேண்டுமா? இதை செய்யுங்கள்!
3. மிகவும் சூடான நீரில் குளிக்க வேண்டாம்
பாட்டியின் இந்த வைத்தியம் அறிவியல் பூர்வமானதாகும். சோம்பல் வராமல் இருக்க குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்று பாட்டி சொல்லி நாம் கேட்டிருப்போம், ஆனால் மிக சூடான நீரில் குளிக்கவே கூடாது என்று உங்களுக்குத் தெரியுமா? ஏனென்றால் சூடான நீர் சருமத்தில் படும்போது சருமம் வறண்டு போகும். இதனால், குளிர்காலத்தில் சருமத்தில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்கள் குறைந்து, ஈரப்பதமின்றி வறண்டு போய்விடும். நீங்கள் குளிர்ந்த நீரில் குளிக்க முடியாவிட்டால், வெதுவெதுப்பான நீரில் குளிக்க முயற்சிக்கலாம்.
4. வயிற்று பிரச்சனைகளை சரிசெய்யும் இஞ்சி
பாட்டி வைத்திய முறையில், இஞ்சியையும் தேனையும் சேர்த்து உண்பதால் வயிற்று வலி மற்றும் வாயு பிரச்சனைகள் குறையும். ஆயுர்வேதத்திலும் இஞ்சி மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இதன் மருத்துவ குணங்களையும் நாம் கேள்விப்பட்டிருப்போம். குளிர்காலத்தில் இஞ்சி டீ குடிப்பது இதமாக இருக்கும்.
5. மஞ்சள் பால்
குளிர்காலத்திற்கு மஞ்சள் பால் சிறந்தது என்று பல நிபுணர்கள் கருதுகின்றனர். உங்களுக்கு மஞ்சள் அல்லது பால் ஒவ்வாமை இருந்தால், இதை தவிர்த்திடுங்கள். ஆனால் இவை உங்களுக்கு ஒத்துக்கொள்ளும் என்றால் தாராளமாகக் குடிக்கலாம். வெதுவெதுப்பான மஞ்சள் பால் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு மிகவும் சிறந்ததாகும். இது உங்கள் உடலை வெப்பமாக வைத்திருக்கவும் உதவுகிறது.
குறிப்பு: இவை பெரும்பாலான இந்திய குடும்பங்களில் பின்பற்றப்படும் பிரபலமான வீட்டு வைத்தியங்கள், ஆனால் இவற்றின் நம்பகத்தன்மை எந்த புத்தகத்திலும் இல்லை. உங்களுக்கு விருப்பமில்லை என்றால், இதை முயற்சி செய்ய வேண்டாம் அல்லது நிபுணரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளவும். இந்த உதவிக்குறிப்புகள் பெரும்பாலான மக்களுக்குப் பயனுள்ளதாக இருந்தாலும், உங்கள் உடல்நலம் மற்றும் சரும நிலைக்கு ஏற்ப உங்களுக்குப் பொருந்தாமலும் போகலாம்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation