பாகற்காய் என்று பெயரை கேட்டாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் அலறி அடித்து ஓடுவார்கள். அதன் சுவை கசப்பு தன்மையுடன் இருக்கும். ஆனால் பல நோய்களுக்கு தீர்வு காண இந்த பாகற்காய் பெரிதும் உதவுகிறது. நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாகற்காயை வைத்து வீட்டிலேயே சுவையான பாகற்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
பாகற்காய் ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள்:
- ஒரு கிலோ பாகற்காய்
- 20 பச்சை மிளகாய்
- 200 கிராம் சின்ன வெங்காயம்
- ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
- ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
- 50 கிராம் இஞ்சி
- 50 கிராம் பூண்டு
- 90 மில்லி வினிகர்
- தேவையான அளவு எண்ணெய்
- ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு
- ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயம்
- உப்பு தேவையான அளவு
- சிறிதளவு கறிவேப்பிலை
பாகற்காய் ஊறுகாய் செய்முறை:
பாகற்காயை முதலில் தண்ணீரில் நன்றாக கழுவி சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது பாகற்காயை வெட்டி உள்ளிருக்கும் விதைகளை நீக்கி வைக்கவும். பிறகு பாகற்காயில் உள்ள தண்ணீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அதே போல சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பாகற்காயில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஒரு நான்ஸ்டிக் கடாயில் போட்டு அதிக சூட்டில் நன்கு வதக்கவும். பாகற்காயில் உள்ள நீர் ஆவி ஆகும் வரை நன்றாக வதக்க வேண்டும். இப்போது இதனை வெயிலில் ஒரு பத்து மணி நேரம் காய வையுங்கள். ஒரு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் வெந்தயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதற்கு பிறகு வெயிலில் காய வைத்த பாகற்காய், இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய சின்ன வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு கிளறி விடுங்கள். இறுதியாக இந்த கலவையுடன் சிறிதளவு வினிகர் கலந்து ஒரு கண்ணாடி ஜாடியில் போட்டு வைக்கவும். அவ்வளவுதான் சுவையான ஆரோக்கியமான பாகற்காய் ஊறுகாய் ரெடி. இந்த பாகற்காய் ஊறுகாயை ஒரு மாதம் வெளியில் வைத்தும் அல்லது நாலு மாதங்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்தும் சாப்பிட்டு வரலாம்.
மேலும் படிக்க: பரங்கிக்காயை வைத்து இந்த ஸ்வீட் வகைகளை செய்து பாருங்க!
பாகற்காயின் மருத்துவ குணங்கள்:
பாகற்காயில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உடலின் இன்சுலின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த பாகற்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வரலாம். அதேபோல உங்கள் சருமத்தை பாதுகாக்க தினசரி உணவில் பாகற்காயை சேர்த்து சாப்பிடுவது அவசியம். இது தோல் சுருக்கத்தை குறைத்து வயதான தோற்றத்தை தடுக்க உதவுகிறது. மேலும் பாகற்காயில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வை பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவியாக இருக்கிறது. இதில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பொட்டாசியம், இரும்புச்சத்து அதிக அளவு நிறைந்துள்ளதால் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவும். வளரும் குழந்தைகளுக்கு பாகற்காய் கொடுத்து வந்தால் வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும். பாகற்காய் வறுவல், பாகற்காய் புலாவ், பாகற்காய் அல்வா போன்ற உணவு வகைகளை சமைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
Image source: google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation