
ஐயப்பனை உள்ளன்போடு தரிசிக்க விரும்பும் நவதமிழ் மாதமான கார்த்திகையின் முதல் நாளில் விரதத்தை தொடங்குவது நல்லது. 41 நாட்கள் விரதம் கடைபிடித்த பிறகு சபரிமலைக்கு யாத்திரை செல்லலாம். ஐயப்பன் வழிபாட்டில் ஒழுக்கம் என்பது மிக மிக முக்கியம். அப்போது தான் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான ஐயப்பனின் அருள் கிடைக்கும்.

சபரிமலைக்கு செல்வதாக முடிவெடுத்தால் முதலில் எத்தனை நாட்கள் விரதம் கடைபிடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாக ஐயப்ப பக்தர்கள் ஒரு மண்டலம் விரதம் கடைபிடிப்பார்கள். ஒரு மண்டலம் என்பது 48 நாட்கள் ஆகும். 48 நாட்கள் விரதத்தை சிரமமாக கருதுவோர் அரை மண்டலம் அதாவது 24 நாட்கள் விரதம் கடைபிடிக்கலாம். குறைந்தபட்சம் 24 நாட்கள் விரதம் கடைபிடித்தால் மட்டுமே சபரிமலை செல்லுங்கள். சபரிமலைக்கு செல்வதை பயணமாக கருத கூடாது. 2-3 நாட்கள் அல்லது ஒரு வாரம் விரதம் கடைபிடித்து சபரிமலை செல்வது அர்த்தமற்றது.
ஐயப்பனுக்கு இருக்கும் விரதத்தை நேர்த்தியாக கடைபிடியுங்கள். தன்னடக்கம், புலன் அடக்கத்தை கொண்டு வருவதே ஐயப்ப விரதம். குருசாமியின் வழிகாடுதல்படி மாலை அணிவித்து விரதம் கடைபிடித்து சபரிமலைக்கு யாத்திரை செல்லுங்கள்.
கோயிலுக்கு சென்று துளசி மாலையும், ருத்ராட்ச மாலையும் இணைந்தவாறு மாலை அணிவிக்கவும். ஏனெனில் ஐயப்பன் சிவபெருமானுக்கும், பெருமாளுக்கும் உரிய குழந்தை ஆவார்.
மாலை அணிவித்த உடனேயே உங்களிடம் மாற்றம் தெரிய வேண்டும். நெற்றியில் எந்நேரமும் சந்தனம், குங்குமம், விபூதி இருப்பது அவசியம். காலை, மாலையென இரண்டு நேரம் குளிக்கவும். எவ்வளவு வேலை இருந்தாலும் இவற்றை நாம் தவற விடக்கூடாது.
மாலை 6 மணிக்கு சரியாக வீட்டில் ஐயப்பன் படத்தின் முன்பு அமர்ந்து சரணம் படிக்கவும். பணியில் இருந்தாலும் மனதில் ஐயப்பனின் 108 சரணத்தை படிக்கவும். முதல் முறை மாலை போடும் நபர்கள் சரண புத்தகத்தை வாங்கி கொள்ளுங்கள். வீட்டை சுத்தப்படுத்தி பூஜை அறையில் அமர்ந்து சரணம் படிக்கவும்.
மேலும் படிங்க கோவிலுக்கு செல்லும் நாளில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது! ஆன்மிக வழிகாட்டுதல்...
யாத்திரையின் போது செருப்பு அணியக் கூடாது என்பதற்காகவே விரத காலத்தில் செருப்பு இன்றி நடக்க பயிற்சி எடுக்கிறோம். கருப்பு, காவி, நீல உடைகளை மட்டுமே அணிந்து விரதம் கடைபிடியுங்கள். கன்னி சாமியாக இருந்தால் காவி நிறத்தில் ஆடை அணியவும். சைவ உணவுகளை மட்டுமே உட்கொண்டு சாத்விக குணத்திற்கு மாறுங்கள். இதன் மூலம் உடலில் இருந்து தேவையற்ற நச்சுகள் நீக்கப்படும். காலை, இரவு நேரங்களில் எளிய உணவுகளை உட்கொண்டு மதிய நேரத்தில் பட்டினி இருக்கவும். தரையில் தலையணை இன்றி படுக்கவும்.
இந்த 48 நாட்களில் யாரிடமும் கோபம் கொள்ளாதீர்கள், வீண் வம்புக்கு செல்லாதீர்கள், தகாத வார்த்தைகளை பேசாதீர்கள், பெண்களிடம் பேசுவதை தவிர்த்திடுங்கள், பெண்களிடம் தள்ளி நின்று முகத்தை கூட பார்க்காமல் அம்மா என்று குறிப்பிட்டு பேசவும். தீய பழக்கங்களுக்கு விடை கொடுங்கள்.
குருசாமியின் அறிவுறுத்தல்படி வீட்டில் ஐயப்ப பூஜை நடத்தவும். ஐயப்ப பக்தர்களை அழைத்து அன்னதானம் போடுங்கள். கலி உலகத்தில் எவன் ஒருவன் தானம், தர்மம் செய்கின்றானோ அவனே ஐயப்பனின் ஆசியை பெறுவான். சுகங்களை எல்லாம் விட்டுக் கொடுத்தால் மட்டுமே ஐயப்பனின் அருளையும், ஆசியையும் பெற முடியும்.
நெறிமுறைகளோடு ஐயப்ப விரதத்தை கடைபிடித்தால் நிஜ ரூப தரிசனமாக ஐயப்பன் உங்களுக்கு காட்சியளிப்பார்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com