சாவியை எங்க வைத்தேன்,என்னோட போன் காணோமோ? என மறதியில் தேடுவது இயல்பான ஒன்று. அதேசமயம் இதையே வழக்கமாக வைத்துக் கொள்ளும் போது தான் அல்சைமர் எனப்படும் மறதி நோய் பாதிப்பை நாம் சந்திக்க நேரிடும் என அர்த்தம். குறிப்பாக மனிதனின் மூளை பல கோடி நரம்பு செல்களால் ஆனது. நாம் பேசுவது முதல் நடப்பது உள்ளிட்ட அன்றாட பணிகளைச் செய்வதைக் கட்டுக்குள் வைத்திருக்கிற உறுதுணையாக உள்ளது. இவற்றில் சில மாறுபாடுகள் ஏற்படும் போது தான் மறதி நோய் பாதிப்பிற்கு உள்ளாகிறோம்.
மறதி நோய் என்றால் என்ன?
முதியவர்களை அதிகம் பாதிக்கும் அல்சைமர் எனப்படும் மறதி நோய் பாதிக்கப்படும் போது, எந்த விஷயத்தையும் நியாபகம் வைத்திருக்க முடியாது. எளிதில் மறந்து விடுவார்கள். இதோடு புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்படும். வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களைக் கூட மறந்துவிடக்கூடிய சூழல் ஏற்படும். சிலர் சொன்ன விஷயத்தைத் திரும்ப திரும்ப சொல்வார்கள். பேச தெரியாதவர்கள் போல தடுமாற்றங்களைச் சந்திப்பார்கள். ஒருவர் பேசிய 5 நிமிடத்திற்குள் அத்தனையும் மறந்துவிடுவார்கள். இதெல்லாம் வயதான காலத்தில் ஏற்படுவது என்பது இயல்பான ஒன்று என்றாலும் கண்டுகொள்ளாமல் விட்டு விடும் போது உயிரிழப்புகள் கூட சில நேரங்களில் ஏற்படக்கூடும். ஆண்களை விட பெண்களுக்குத் தான் இந்த பாதிப்பு அதிகளவில் ஏற்படுகிறது என்பதால் என்ன செய்ய வேண்டும்? மறதி நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களை எப்படிப ராமரிக்க வேண்டும்? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளுங்கள்.
பராமரிக்கும் முறை:
- மறதி நம்மில் அனைவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று. வயதானக் காலத்தில் இந்த பாதிப்புக்குள்ளானவர்களைக் குழந்தைகள் போல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை உங்களை மறந்து விட்டாலும் அவர்கள் மீது கோபம் கொள்ளாமல் பொறுமையாக கவனித்துக் கொள்ள வேண்டும்.
- ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் குளிப்பது, ஆடைகளை மாற்றுவது மற்றும் சாப்பிடுவது போன்ற வழக்கத்தை வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
- மறதி நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் விரும்பி செய்யக்கூடிய செயல்களைத் திட்டமிட்டு, அவற்றை ஒரே நேரத்தில் செய்வதற்கு முயற்சிக்கவும்
- குடும்பத்திலுள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் அடிக்கடி சந்திப்புகளை ஏற்படுத்தித் தர முயற்சி செய்யவும். நேரில் சந்திக்க நேரம் கிடைக்காவிட்டாலும், வீடியோ கால் மூலமாக பேசுவதற்கான வாய்ப்புகளை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கவும். எப்போதும் அவர்களுடன் மென்மையாகவும் மரியாதையுடனும் இருங்கள்.
- மறதி நோய் அதிகமாக ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்றால், பெண்களுக்குப் பிடித்த கைவினைப் பொருள்களை செய்வதற்குக் கற்றுக் கொடுக்கவும்.
- மூளையை அமைதிப்படுத்தக்கூடிய வகையில் பாடல்களைக் கேட்பதற்கும், புத்தங்களைப் படிப்பதற்கும் அவர்களுக்கு உதவியாக இருக்கவும்.

இது போன்ற விஷயங்களை நீங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டாலே மறதிநோய் பாதிப்பை ஓரளவிற்கு குறைக்க முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation