ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை நிலவும் குளிரிலிருந்து எப்படியாவது தப்பித்துக் கொள்ள வேண்டும்? என்று தான் நினைப்போம். அந்தளவிற்கு அம்மாதத்தில் நிலவும் குளிர்காற்று சளி, இருமல், தொண்டை கரகரப்பு போன்ற பல சுவாச பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வழியாக அமைகிறது.
குறிப்பாக இந்த மாதங்களில் குழந்தைகளுக்குப் பிடிக்கும் நெஞ்சு சளி எத்தனை மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும் குறையவே குறையாது. இரவு நேரத்தில் தூங்கும் போது அதீத இருமல் ஏற்படுவதோடு சுவாசிப்பதற்கும் பிரச்சனை ஏற்படும். சில நேரங்களில் மூச்சுத்திணறல் எனப்படும் வீசிங் பிரச்சனையால் குழந்தைகள் அவதிப்படுவதை அதிகளவில் பார்க்கிறோம். இதற்கு மருத்துவமனைக்குச் சென்று நெபுலைசர் வைத்தால் மட்டுமே சரியாகக்கூடும். ஆனால் இந்த வைத்திய முறை என்பது நிரந்தர தீர்வாக ஒருபோதும் அமையாது.
குழந்தைகளுக்குப் பிடித்துள்ள நெஞ்சு சளி கரைந்தால் மட்டுமே எவ்வித உடல் நலப்பாதிப்புகளும் ஏற்படாது. எனவே சுற்றுப்புற சூழலைத் தூய்மை வைத்திருத்தல், உணவு முறைகளில் மாற்றம் உள்பட சில எளிய பாட்டி வைத்தியங்களைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இதோ எப்படி? முழு விபரம் இங்கே!
நெஞ்சு சளிக்கான வீட்டு வைத்திய முறைகள்:
தூதுவளை கசாயம்:
நெஞ்சு சளியால் அவதிப்படும் குழந்தைகளுக்கு தூதுவளை இலைகளைப் பறிந்து கசாயம் காய்ச்சிக் குடிக்கலாம். கசப்புத்தன்மை அவர்களுக்குப் பிடிக்காது என்பதால் சிறிதளவு தேன் கலந்துக் கொடுக்கவும்.
மிளகு பால் / கசாயம்:
5-6 மிளகுகளை நைசாக அரைத்து தேன் கலந்துக் கொடுக்கவும். பாலிலும் மிளகுத்தூளை கலந்துக்கொடுக்கும் போது, இதில் உள்ள காட்டம் சளிளை மெல்லிதாக்கி வெளியேற உதவுகிறது.
கற்பூரவள்ளி:
சளி மற்றும் இருமலுக்கான சிறந்த நாட்டு மருந்தாக உள்ளது. அதிக சளி மற்றும் இருமலால் அவதிப்படும் குழந்தைகளுக்கு 2 கற்பூரவள்ளி இலைகளைப் பறித்து நன்றாக காய்ச்சி தேன் கலந்து கொடுக்கலாம். இல்லையென்றால் இலைகளைத் தட்டி சாறாகவும் குடிக்கச் செய்யலாம்.
தேங்காய் எண்ணெய் மற்றும் கற்பூரம்:
அதீத சளியால் இரவு நேரத்தில் குழந்தைகள் தூங்க முடியாமல் அவதிப்படுவார்கள். தொடர்ந்து இருமலும் இருக்கும்.
இந்நேரத்தில் நீங்கள் தேங்காய் எண்ணெய்யை சூடேற்றி அதில் 2 கற்பூரம் உடைத்துப் போட்டு நெஞ்சில் தடவி விட வேண்டும். இவ்வாறு செய்யும் போது இருமல் குறைந்து குழந்தைகள் நிம்மதியாக தூங்குவார்கள்.
ஆடாதொடா:
இன்றைக்கும் பெரும்பாலான கிராமங்களில் சளி மற்றும் இருமலைப் போக்குவதற்குப் பயன்படுத்தும் மூலிகைகளில் ஒன்று தான் ஆடாதோடை. கசப்புத்தன்மை அதிகமாக இருந்தாலும் இது சளிக்கு நல்ல தீர்வாக அமைகிறது.
ஆடாதோடை இலைகளை நன்றாக தண்ணீரில் கொதிக்க விட்டு தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்ந்து பருகலாம்.
சளிப்பிடிப்பதற்கான முக்கிய காரணங்கள்:
இன்றைய குழந்தைகளுக்கு சாக்லேட்கள் தான் அளாதிப்பிரியம். அதிகளவில் அவர்கள் உட்கொள்ளும் இனிப்பு வகையான சாக்லேட்டுகளும் சளி பிடிப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
குழந்தைகள் கால்சியம் தேவை என்பதால், தாய்மார்கள் காலை மற்றும் இரவு நேரங்களில் கட்டாயம் பால் குடிக்க வேண்டும் என வற்புறுத்துவார்கள். இதுவும் சளி பிடிப்பதற்கான ஒரு காரணமாக அமைகிறது. எனவே நீங்கள் குளிர்காலத்தில் உங்கள் குழந்தைகளுக்கு பால் காய்ச்சும் போது கொஞ்சம் தண்ணீரைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சர்க்கரைக்குப் பதிலாக பனங்கற்கண்டுகளைச் சேர்த்துக் கொள்ளவும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation