பெரும்பாலானவர்களுக்கு லில்லி மலர்களை மிகவும் பிடிக்கும். அவற்றின் நீண்ட தண்டுகள், வண்ணங்கள் மற்றும் நறுமணம் ஆகியவை லில்லி மலர்களை தனித்துவமாக காண்பிக்கின்றன. இவற்றை தங்கள் வீட்டு தோட்டத்தில் வளர்க்க வேண்டும் என்று நிறைய பேருக்கு விருப்பம் இருக்கும்.
மேலும் படிக்க: மாடித் தோட்டம் வைத்திருப்பவரா நீங்கள்? இந்த காய்கறிகளை இப்போதே விதைத்து குளிர் காலத்தில் அறுவடை செய்யலாம்
ஆனால், லில்லி மலர்களை வளர்ப்பதற்கு என சில வழிமுறைகள் இருக்கின்றன. நடவு செய்யும் காலம் முதல் சீரான பராமரிப்பு வரை பல்வேறு விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அதன்படி, உங்கள் வீட்டு தோட்டத்தில் லில்லி மலர்களை எப்படி சுலபமாக வளர்க்கலாம் என்று இதில் பார்ப்போம்.
லில்லி பூக்களில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் உங்கள் தோட்டத்திற்கு ஒரு தனித்துவமான அழகை தருகிறது. ஓரியண்டல் லில்லி பூக்கள் (Oriental Lilies), அவற்றின் இனிமையான நறுமணம் மற்றும் பெரிய பூக்களுக்கு பெயர் பெற்றவை. ஆசியாடிக் லில்லிகள் (Asiatic Lilies) துடிப்பான வண்ணங்களையும், விரைவாக பூக்கும் தன்மையையும் கொண்டுள்ளன. இப்படி ஒவ்வொரு வகை பூவுக்கும் ஒரு தனித்துவம் உள்ளது. எனவே, உங்கள் தோட்டத்திற்கு அழகு சேர்க்கும் மலரை கவனமாக தேர்வு செய்யவும்.
நடவு செய்யும் நேரம் மிகவும் முக்கியமானது. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில், அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் லில்லி பூக்களை நடவு செய்வது வழக்கம். நீங்கள் வெப்பமான காலநிலையில் இருந்தால், வசந்த காலத்தின் தொடக்கத்தில் நடவு செய்யலாம். ஆனால், மண் மிகவும் வெப்பமாகவோ அல்லது அதிக ஈரப்பதத்துடனோ இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
லில்லி பூக்களின் குமிழ்களை நடவு செய்யும் போது, குமிழின் உயரத்தை போல மூன்று மடங்கு ஆழத்தில், அதாவது பொதுவாக 6 முதல் 8 அங்குல ஆழத்தில் நடவு செய்ய வேண்டும். ஒவ்வொரு குமிழுக்கும் போதுமான இடம் அளிப்பதற்காக, அவற்றை 8 முதல் 12 அங்குல இடைவெளியில் நடவு செய்யவும். இந்த இடைவெளி காற்றின் ஓட்டத்தை மேம்படுத்தி, பூஞ்சை நோய்கள் வராமல் தடுக்க உதவும்.
மேலும் படிக்க: மாதுளை வளர்ப்பு: வீட்டிலேயே ஆரோக்கியமான பழங்களை அறுவடை செய்வது எப்படி?
லில்லி பூக்கள் நல்ல வடிகால் வசதியுள்ள, லேசான அமிலத்தன்மை கொண்ட மண்ணில் செழித்து வளரும். மண் எப்போதும் ஈரப்பதமாக இருந்தால் குமிழ்கள் அழுகிவிடும். தொட்டியில் வளர்க்கும் லில்லிகளுக்கு, ஆழமான தொட்டிகளில், நல்ல வடிகால் துளைகளுடன் கூடிய, இலகுவான மண் கலவையை பயன்படுத்தவும். இது பூக்களின் சீரான வளர்ச்சிக்கு உதவும்.
பெரும்பாலான லில்லி பூக்களுக்கு சூரிய ஒளி அவசியம். தினமும் குறைந்தது 6 மணிநேர சூரிய ஒளி தேவை. ஆனால் கோடை காலத்தில், கடுமையான வெப்பத்திலிருந்து அவற்றை பாதுகாக்க சற்று நிழலான இடத்திற்கு மாற்றலாம்.
லில்லி பூக்களுக்கு தண்ணீரை ஆழமாக பாய்ச்சவும். ஆனால், அடிக்கடி தண்ணீர் விடக் கூடாது. தண்ணீர் பாய்ச்சுவதற்கு முன், மண்ணின் மேற்புறத்தில் ஓரிரு அங்குலத்திற்கு உலர விடவும். அதிகப்படியான நீர் பாய்ச்சுவது குமிழ்களை அழுகச் செய்யும். எனவே, மண்ணை எப்போதும் ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டாம்.
லில்லி பூக்கள் அதிகப்படியான உரம் தேவைப்படும் செடிகள் அல்ல. தேவையான அளவிற்கு மட்டும் உரம் இடுவது சிறந்தது. வளர்ச்சி காலத்தில், குறிப்பாக வசந்த காலத்திலும், கோடையின் ஆரம்பத்திலும், சீரான திரவ உரத்தை பயன்படுத்தவும். அதிக நைட்ரஜன் கொண்ட உரங்களை தவிர்க்கவும். ஏனெனில், அவை பூக்கள் பூப்பதற்கு பதிலாக இலைகளை வளர்க்க ஊக்குவிக்கும்.
லில்லி பூக்களை பராமரிப்பது ஒப்பீட்டளவில் எளிதானது. எனினும், பல்வேறு வகையான பூச்சிகளால் அவை பாதிக்கப்படலாம். உங்கள் செடிகளை தவறாமல் பரிசோதித்து, பூச்சிகள் தென்பட்டால் வேப்ப எண்ணெய் பயன்படுத்தவும்.
இந்த குறிப்புகளை சரியாக பின்பற்றினால் லில்லி பூக்களை எளிதாக வளர்த்து மகிழலாம். இப்படி செய்யும் போது ஒரு ஆண்டிற்குள் நல்ல மலர்கள் பூக்கத் தொடங்கும். இது உங்கள் தோட்டத்திற்கு கூடுதல் அழகைக் கொடுக்கும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com