பலாப்பழத்தில் நல்ல சுவை மட்டுமல்லாமல், நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் அதிக அளவு நிரம்பியுள்ளது. அனைவரும் சாப்பிட விரும்பும் பழமாக பலாப்பழம் இருக்கிறது. பலாப்பழத்தை வைத்து கறி, ஊறுகாய், பக்கோடா, கோஃப்தா சமைத்து சாப்பிடலாம். கேரளாவில் பெரும்பாலான வீடுகளில் பலா மரம் இருப்பதை நாம் பார்த்திருப்போம். பலாப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம், இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் ஜிங்க் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இதைவிட முக்கியமான விஷயம் இந்த பழத்தில் கலோரிகள் கிடையாது.
மா, பலா, வாழை என்று கூறப்படும் முக்கனிகளில் ஒன்று தான் இந்த பலாப்பழம். பலாமரத்தின் இலை, காய், கனி, வேர் போன்ற அனைத்து பகுதிகளும் மருத்துவப் பொருட்களாக பயன்படுத்தப்படுகிறது. பலா இலைகளை ஒன்றாக தைத்து அதில் உணவு வைத்து சாப்பிடும் பழக்கம் நம் முன்னோர் காலத்தில் இருந்தது. தற்போது இந்த பழக்கம் குறைந்துவிட்டது. அதிக நார்ச்சத்து கொண்ட இந்த பலாப்பழம் சக்தி வாய்ந்த உணவாக விளங்குகிறது. பலாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குழந்தைகளின் உடல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
மேலும் படிக்க:பெண்களின் உடல் எடையை குறைக்க உதவும் ப்ரோக்கோலி!
பலாப்பழத்தின் நன்மை:
பலாப்பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டால் மூளை நரம்புகள் வலுப்பெறும். மேலும் வாத நோய் போன்றவற்றை நீக்கும் சக்தி பலாப்பழத்திற்கு உண்டு. பலாப்பழத்தில் அதிகம் உள்ள வைட்டமின் ஏ நம் மூளைக்கும் உடலுக்கும் அதிக பலத்தை தரும். அதுமட்டுமின்றி ரத்தத்தை விருத்தி செய்து உடலில் உள்ள தொற்று கிருமிகளை அழிக்க உதவும்.
பலாக்காய்:
பெண்களிடையே தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க கூடிய சக்தி இந்த பலாக்காய்க்கு உண்டு. பலாக்காய் சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் தணிக்க உதவும். மேலும் பித்த மயக்கம், கிறுகிறுப்பு, வாந்தி ஆகியவற்றையும் இது குணமாக்கும்.
பலா மரத்தின் பால்:
பலா மரத்தில் இருந்து கிடைக்கும் பாலினை எடுத்து நெடுநாள் உடையாமல் இருக்கும் நெறி கட்டிகள் மீது பூசினால் அது பழுத்து உடையும். இது மட்டுமல்லாமல் பலா மரத்துப் பாலிற்கு பாக்டீரியாக் கிருமிகளைத் தடுக்கும் திறன் உள்ளது.
பலா பிஞ்சு:
பலா பிஞ்சினை சமைத்து சாப்பிட்டு வந்தால் பித்தமும் நீர் வேட்கையும் நீங்கும். மேலும் இது ஆண்மை அதிகரிக்க உதவும் என்று கூறப்படுகிறது. இதனை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அஜீரண கோளாறு ஏற்படும் என்பதால் அளவாக சாப்பிட வேண்டும்.
பலா இலைகள்:
பலா மரத்தின் இலைதளிரை அரைத்து உடலில் உள்ள சொரி சிரங்குகளுக்கு பூசி வந்தால் அவை நாளடைவில் அது குணமாகும். பலா இலைகளை வெயிலில் காயவைத்து இடித்து பொடியாக்கி அதனை தேனில் கலந்து தினமும் காலை வேளையில் அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும் மற்றும் வாயுத் தொல்லைகள் நீங்கும்.
மேலும் படிக்க: மாதவிடாய் வலியைக் குறைக்க உதவும் ஐந்து பானங்கள்!
பலா மர வேர்:
பலா மரத்தின் வேரை துண்டு துண்டாக வெட்டி நன்கு கழுவி உலர்த்தி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த வேர்களை பாதியாக சிதைத்து நீர் விட்டு காய்ச்ச வேண்டும். இந்த நீர் பாதி அளவாக வற்றியதும் வடிகட்டி குடித்து வந்தால் கழிச்சல் என்று கூறப்படும் ஒரு வகை வயிற்றுப்போக்கு குணமாகும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation