herzindagi
image

Herbal Tea for Winter: குளிர்காலத்தில் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் 5 மூலிகை தேநீர்

Herbal drinks: குளிர்காலத்தின் போது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் 5 மூலிகை தேநீர் குறித்து இதில் காணலாம். இவை உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
Editorial
Updated:- 2025-12-08, 07:46 IST

குளிர்காலம் தொடங்கியதில் இருந்து சளி, காய்ச்சல் போன்ற பருவகால உபாதைகள் அதிகரிக்கும். இந்தக் காலக்கட்டத்தில் நம் உடல் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்வதும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதும் மிக அவசியமாகும். காலையில் எழுந்ததும் சூடாக ஒரு கப் காபி அல்லது டீ குடிப்பது வழக்கம். ஆனால், இந்தக் குளிர்காலத்தில் அதற்கு பதிலாக ஆரோக்கியம் நிறைந்த மூலிகை தேநீரை அருந்துவது உடலுக்கு பல நன்மைகளை தரும்.

குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் மூலிகை தேநீர்:

 

பால் மற்றும் சர்க்கரை சேர்ப்பதற்கு பதிலாக, நம் சமையலறையில் இருக்கும் இஞ்சி, மிளகு, துளசி போன்ற மருத்துவ குணமிக்க பொருட்களை கொண்டு தயாரிக்கும் தேநீர், குளிர்கால நோய்களிலிருந்து உங்களை காக்கும் கவசம் போன்று செயல்படும். உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பது மட்டுமின்றி, தொண்டை வலி, செரிமான கோளாறு மற்றும் உடல் வலியை போக்கும் 5 அற்புதமான மூலிகை தேநீர் வகைகளை தயாரிப்பது எப்படி என்று இதில் காண்போம்.

 

இஞ்சி தேநீர் தயாரிக்கும் முறை:

 

சளி, இருமல் மற்றும் காய்ச்சல் ஏற்படும் போது இஞ்சி தேநீர் குடிப்பது ஒரு சிறந்த நிவாரணியாக இருக்கும். இஞ்சியின் வெப்பத் தன்மை கிருமிகளை தடுக்க உதவுகிறது. தேன், தொண்டை வலிக்கு இதமளிக்கிறது.

 

தேவையான பொருட்கள்:

 

  • துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்
  • தேன் - ஒன்றரை டீஸ்பூன்
  • கிராம்பு - 2
  • லவங்கப்பட்டை - சிறிய துண்டு

 

செய்முறை:

 

  • ஒரு பாத்திரத்தில் ஒரு கப் நீரை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
  • நீர் கொதிக்கும் போது, தேனை தவிர மற்ற அனைத்து பொருட்களையும் அதில் சேர்க்கவும்.
  • அடுப்பை மிதமான நெருப்பில் வைத்து, சுமார் 15 நிமிடங்கள் அந்த சாறு நீரில் இறங்கும் வரை கொதிக்க விடவும்.
  • பிறகு வடிகட்டி ஒரு கப்பில் ஊற்றி, தேவையான அளவு தேன் கலந்து பருகவும்.
  • இது சளிக்கு மட்டுமல்ல, வயிற்று பிரச்சனைகளுக்கும் சிறந்த மருந்து. அஜீரணக் கோளாறுகளை சரிசெய்ய இஞ்சி மற்றும் பட்டை பெரிதும் உதவும்.

மேலும் படிக்க: Immunity Boosting Fruits: குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் இந்த 6 பழங்களை அவசியம் சாப்பிடவும்

 

எலுமிச்சை மற்றும் மிளகு தேநீர்:

 

உடல் சோர்வாக இருக்கும் போதும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் போதும் இந்த தேநீர் குடிப்பது உடனடி ஆற்றலை தரும்.

Immunity boosting drinks

 

தேவையான பொருட்கள்:

 

  • எலுமிச்சை - 1 பழம்
  • மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
  • மிளகுத் தூள் - கால் டீஸ்பூன்
  • தேன் - ஒன்றரை டீஸ்பூன்

 

செய்முறை:

 

  • ஒரு கப்பில் மிளகுத் தூள் மற்றும் மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ளவும்.
  • நன்கு கொதிக்க வைத்த வெந்நீரை அந்த கப்பில் ஊற்றவும்.
  • பின்னர் அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்துக் கலக்கவும். இவ்வாறு செய்தால் தேநீர் தயாராகி விடும்.

 

இது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் என்று கூறப்படுகிறது.

 

அஸ்வகந்தா தேநீர்:

 

அஸ்வகந்தா ஒரு ஆற்றல் மிகுந்த மூலிகை என்று அழைக்கப்படுகிறது. இது மன அழுத்தத்தை குறைத்து, நோய் எதிர்ப்பு மண்டலத்தை பல மடங்கு வலுப்படுத்தும்.

 

தேவையான பொருட்கள்:

 

  • காய்ந்த அஸ்வகந்தா வேர் - ஒரு துண்டு
  • தேன் - 1 டீஸ்பூன்

 

செய்முறை:

 

  • அஸ்வகந்தா வேரை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
  • ஒரு கப் நீரில் இந்த வேரை போட்டு, சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை நன்கு கொதிக்க விடவும்.
  • வேரின் சத்துகள் நீரில் இறங்கியதும், வடிகட்டி தேன் கலந்து சூடாக பருகவும்.
  • இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது. மேலும், குளிர்காலத்தில் ஏற்படும் சோம்பலை போக்கி, பதற்றம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்க இது உதவும்.

மேலும் படிக்க: Winter diet: குளிர்காலத்தின் போது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் 5 உணவுகள்

 

துளசி தேநீர்:

 

மூலிகைகளின் ராணி என்று அழைக்கப்படும் துளசி, கிருமிகளுக்கு எதிராக போராடுவதில் சிறந்து விளங்குகிறது.

Winter health tips

 

தேவையான பொருட்கள்:

 

  • துளசி இலைகள் - கால் கப்
  • தேன் - 1 டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்

 

செய்முறை:

 

  • ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி, அதில் துளசி இலைகளை போட்டுக் கொதிக்க விடவும்.
  • தண்ணீர் கொதித்ததும், நெருப்பை மிதமாக வைத்து 15 நிமிடங்கள் அப்படியே விடவும்.
  • பிறகு வடிகட்டி, அதில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கவும்.

 

இது நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவது மட்டுமல்லாமல், சில சரும நோய்களை குணப்படுத்தவும் உதவுகிறது. மேலும், இது சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதாக கூறப்படுகிறது.

 

புதினா தேநீர்:

 

ஞாபக திறனை அதிகரிக்கவும், வயிற்று பிரச்சனைகளை சரி செய்யவும் புதினா தேநீர் சிறந்தது என்று அறியப்படுகிறது.

 

தேவையான பொருட்கள்:

 

  • புதினா இலைகள் - 10
  • ரோஸ்மேரி - சிறிதளவு
  • எலுமிச்சை சாறு - சிறிதளவு

 

செய்முறை:

 

  • புதினா இலைகளை கைகளால் கிள்ளி ஒரு கப்பில் போடவும்.
  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் ரோஸ்மேரியை போட்டுக் கொதிக்க விடவும்.
  • நீர் கொதித்ததும், அதை அப்படியே கப்பில் உள்ள புதினா இலைகளின் மீது ஊற்றவும்.
  • 10 நிமிடங்கள் அதனை மூடி வைக்கவும். பின்னர் எலுமிச்சை சாறு சேர்த்து பருகவும்.

 

இது மிகவும் புத்துணர்ச்சியூட்டும் ஒரு பானம். வயிறு உப்புசம் மற்றும் செரிமான கோளாறுகளுக்கு இது உடனடி தீர்வு தரும்.

இந்த குளிர்காலத்தில் கடைகளில் விற்கும் செயற்கை பானங்களை தவிர்த்து, வீட்டிலேயே செய்யக் கூடிய மூலிகை தேநீர்களை அருந்தி ஆரோக்கியமாக இருக்கலாம்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com