உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் கேடயமாக இயற்கை அன்னை நமக்கு தந்த பரிசாக வெற்றிலையை குறிப்பிடலாம். அந்த அளவிற்கு மருத்துவம் மற்றும் மகத்துவம் நிறைந்தது வெற்றிலை. சிறப்பான ஒரு விருந்துக்கு பிறகு சாப்பிட்ட உணவு ஜூரணம் ஆவதற்கு வெற்றிலை பாக்கு போடுவது நம் தமிழ் மரபு. இப்படி பல விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம். இத்தனை பயன்கள் கொண்ட வெற்றிலையை நாம் வீட்டிலேயே வளர்க்கலாம்.
வெற்றிலை கொடி வளர்ப்பதற்கு நல்ல புதிதான ஆரோக்கியமான வெற்றிலை கொடி கட்டிங்ஸ் வாங்கவும். இதில் இலைகள் மற்றும் குறைந்தது இரண்டு கணு பகுதி இருப்பது அவசியம். வெற்றிலை கொடி கட்டிங்ஸ் எந்த விதமான பூச்சி தாக்குதலுக்கும் பாதிக்கப்பட்டு இருக்க கூடாது. முத்தலான கட்டிங்ஸ் பயன்படுத்தினால் அது செழிப்பின்றி காய்ந்து உயிர்ப்பிடிப்பதற்கான வாய்ப்புகள் குறைவே. எனவே கொடியின் நுனிப்பகுதி அல்லது நடுப்பகுதியை பயன்படுத்தவும்.
- வெற்றிலை கொடி கட்டிங்ஸை தண்ணீரில் ஒரு முறை நன்கு கழுவுங்கள். கொடியில் கணுப் பகுதியை சுற்றியே வேர்கள் வளரும் என்பதால் அங்கு வெட்டக் கூடாது. கணுப்பகுதியில் இருந்து ஒரு அங்குலம் இடம் விட்டு வெட்டவும்.
- மற்றொரு கட்டிங் கொடியின் நடுப்பகுதியில் இருந்து எடுக்கவும். இதில் இரண்டு கணு பகுதி மட்டுமே இருக்கும். இலைகளை வெட்டாமல் பிளாஸ்டிக் பாட்டிலில் கணுப்பகுதி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நிழலில் வைக்கவும்.
- இதில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் மாற்றுங்கள். அப்போது தான் பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்படாது. உரம் சேர்க்க வேண்டிய அவசியமில்லை.
- இப்படி வைத்த 4-5 நாட்களிலேயே கணுப் பகுதியில் வெள்ளையாக வேர் தென்பட ஆரம்பிக்கும்.
- பத்து நாட்களில் வேர் நன்றாக வளர்ந்திருக்கும். 25 நாட்களில் வேர்கள் அதிகமாக வளர்ந்து புது இலைகள் துளிரும். இனி இதை மண் தொட்டியில் மாற்றி வைக்கலாம்.
- இரண்டு வெற்றிலை கட்டிங்ஸ் ஒரே மாதிரி வளர்ந்திருக்கும். வெற்றிலை கட்டிங்ஸில் கணுப் பகுதியின் கீழ் இலை வளர்ந்திருந்தால் வெட்டி விடுங்கள்.
- வெற்றிலை கொடி நன்றாக வளர்வதற்கு ஈரப்பதமான மண் தேவை. அதே நேரம் மண் தொட்டியில் வடிகால் வசதியும் அவசியம்.
- இதில் 60 விழுக்காடு செம்மண், 20 விழுக்காடு கோகோ பீட், 20 விழுக்காடு தொழு உரம் தேவை.
- தினமும் இரண்டு முறை தண்ணீர் ஊற்றி அது தேங்காமல் இருக்கும் வகையில் தொட்டியில் வடி துளை போடவும்.
- பொதுவாக செடி வகைகளை தொட்டியின் நடுவே நடுவார்கள். வெற்றிலை கொடி என்பதால் தொட்டியின் நடுவே கொம்பு வைத்து ஓரங்களில் வெற்றிலை கொடியை வைக்கவும். ஒரு கயிறு கூட போதுமானது. அதை சுற்றியே வெற்றிலை கொடி வளரும்.
- மறைமுக வெயில் அடிக்கும் இடத்தில் இந்த தொட்டியை வைத்தால் வெற்றிலை தள தளவென வளர்ந்திடும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation