ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதித்தால் பல காளைகளைப் பாதுகாக்க முடியாமல் அதன் உரிமையாளர்கள் அடிமாட்டிற்கு அனுப்பிய காலங்களில், நாட்டு இன மாடுகளைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்டது கோவை கோசாலை. தமிழர்களின் பண்பாடு என்பது அழிக்கக்கூடிய விஷயங்கள் அல்ல.. வரும் தலைமுறையினர் கொண்டாடக்கூடிய அற்புதமான நிகழ்வு என்ற கோட்பாடுடன் நாட்டு இன மாடுகளை காப்பாற்றி வளர்த்து வருகின்றனர்.
கோவையில் மேற்கு தொடர்ச்சி மலையில் அடிவாரத்தில் உள்ள வெள்ளயங்கிரி அருகில் நரசிபுரம் பகுதியில் 52 ஏக்கரில் அமைந்துள்ளது இந்த கோசாலை. ஜல்லிக்கட்டு தடையால் அடிமாடுகளுக்குச் சென்ற காடுகளையும், நிற்கதியாய் நின்ற மாடுகளையும் மீட்டு இங்கு வளர்த்து வருகின்றனர். 200 க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள், 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட நாட்டு இன மாடுகள், பசுக்கள் என சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் பராமரிக்கப்படுகிறது.
ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கும் விதம்:
தென் மாவட்டங்களில் பிரதிபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக, கொங்கு மண்டலத்தில் வளர்க்கப்படும் கோசாலை காளைகளுக்குப் பிரத்யேக பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதற்காக மதுரையை சேர்ந்த பல இளைஞர்கள் இங்கே பணியாற்றி வருகின்றனர். மண் குத்துதல் பயிற்சி, நீச்சல் பயிற்சி மற்றும் சத்தான உணவுகளைக் கொடுத்து தீவிரமாக தயார்படுத்தி வருகின்றனர். நாம் காளைகளையும் சும்மா சொல்லக்கூடாது.. வளரும் சூழல் மாறினாலும் அதற்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டு பயிற்சி அளிப்போருக்கு ஒத்துழைப்பு கொடுக்கின்றனர்.
இங்குள்ள ஒவ்வொரு காளைகள் அனைத்திற்கும் ஏற்றவாறு கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளது. எந்த தொற்றும் ஏற்படாத வகையில் 24 மணி நேரமும் இடங்களை சுத்தம் செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். குறிப்பாக கொரோனா காலக்கட்டத்தில் இங்குள்ள மாடுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வெளி ஆட்கள் யாரையும் அனுமதித்ததில்லையாம். அந்தளவிற்கு நாட்டு இன மாடுகளை காக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த கோசாலை உரிமையாளரான சிவகணேஷ்.
ஆர்வம் காட்டும் மக்கள்: ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் நாட்டு இன மாடுகள் குறித்த பல விஷயங்களையும், அவற்றின் முக்கியத்துவத்தையும் மக்கள் தற்போது சோசியல் மீடியாக்களின் வாயிலாக அறிந்து வருகின்றனர். இந்த சூழலில் ஒரே இடத்தில் பல்லாயிரக்கணக்கான மாடுகள் உள்ள இந்த கோசாலையைப் பார்ப்பதற்கு அதிக ஆர்வம் காட்டுகின்றனர். தங்களுடைய குழந்தைகளையும் உடன் அழைத்து வந்து மேற்கு தொடர்ச்சி மலையின் அழகையும், கோசாலையின் சிறப்புகள் மற்றும் ஜல்லிக்கட்டு குறித்த வரலாறுகளையும் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கின்றனர்.
தமிழகத்தில் எங்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றாலும், இங்கு வளர்க்கக்கூடிய காளைகள் உற்சாகத்துடன் பங்கேற்கின்றனர். தமிழர்களின் பண்பாடு மற்றும் வீரத்தை தற்போதும் உயிர்ப்புடன் வைத்துள்ளது ஜல்லிக்கட்டு போட்டிகள் என்று சொன்னால் அது மிகையாகாது.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation