வங்கக்கடலில் உருவாகிய மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னையில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்துள்ளது. ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிவிட்டது. குடியிருப்புகள் அனைத்தும் தண்ணீரால் மூழ்கியதோடு பைக், கார் போன்ற வாகனங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் அனைத்தும் சேதமடைந்துவிட்டது.
குடியிருப்புகள், சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் தேங்கியிருக்கும் மழை நீரை மோட்டார் உதவியுடன் வெளியேற்றும் நடவடிக்கைகளில் மாநகராட்சி ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டுவருகின்றனர். இரவு, பகல் பாராமல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டாலும் இன்னமும் இயல்பு வாழ்க்கைக்கு மக்களால் திரும்ப முடியவில்லை. இந்நேரத்தில் மாநகராட்சி அதிகாரிகள் ஒருபுறம் துப்புரவுத் தொழிலில் ஈடுபட்டாலும், மழையின் தாக்கம் குறைந்தவுடன் பொதுமக்களும் தங்களது வீடுகளில் சுற்றியுள்ள இடங்களில் மழை நீரை அப்புறப்படுத்தும் முயற்சிக்க வேண்டும். இதோ எப்படி? வாருங்கள் தெரிந்துக்கொள்வோம்..
மிக்ஜாம் புயலால் பலரது வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதை சரிசெய்ய அதிகாரிகள் தான் வரவேண்டும் என்று காத்திருக்க வேண்டாம். முதலில் வீட்டின் எந்தப் பகுதிகளில் தண்ணீர் தேக்கம் அதிகம் உள்ளது? என்பது கண்டுபிடித்து அந்த அடைப்புகளை சரிசெய்யவும்.
வீட்டிற்கு முன்பாக அல்லது உங்களது பகுதிகளில் புயல் காற்றினால் மரங்கள் சாய்ந்திருக்கக்கூடும். உங்களது வாசலுக்கு முன்னால் விழுந்திருக்கும் மரங்களை முடிந்தவரை அப்புறப்படுத்த முயற்சிக்கவும். இதனால் தண்ணீர் சாலைகளில் எங்கேயும் தேங்காது.
மழைநீர் சேகரிப்பு தொட்டியில் அடைப்பு இருந்தால் அதை சரி செய்யவும்.
ஈரப்பதத்தினால் புதர்களில் இருந்து பாம்பு போன்ற விஷப்பூச்சிகள் வெளியேறும் என்பதால் மக்கள் வீடுகளில் கவனமுடன் இருக்க வேண்டும். கொஞ்சம் தண்ணீர் வடிந்தவுடன் கிருமிநாசினிகளைக் கொண்டு உங்களது வீடுகளைச் சுத்தம் செய்துவிடுங்கள். வீடுகளைச் சுற்றியும் கிருமிநாசினிகளை தெளிக்கவும்.
வெள்ளத்தால் பாதித்த இடங்களை சரிசெய்ய மீட்புக்குழுவினர் வருவதற்கு முன்னதாக இதுப்போன்ற சின்ன விஷயங்களை முடிந்தவரை மேற்கொள்ள முயற்சிக்கவும். ஆனால் சில இடங்களில் பாதிப்பின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் உடனடியாக அவசர உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்களுக்கான உதவிகளைப் பெற்றுக்கொள்ள மறந்துவிடாதீர்கள்.
பருவ கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
பருவமழை மற்றும் புயல் சில பகுதிகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே நமக்கு எச்சரிக்கை விடுக்கிறது. எனவே அதற்கேற்றால் போல் நாம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.
பேரிடரை சமாளிப்பதற்கான அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் உள்ளதா? என அறிந்துக்கொண்டு அவற்றை முன்னதாக வாங்கி வைத்துக் கொள்ளவும்.
நிவாரண மையங்களின் முகவரிகள் மற்றும் எப்படி அங்கு செல்ல வேண்டும்? என தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.
வீடுகளில் உள்ள விலையுயர்ந்த பொருள்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற முயற்சிக்கவும்.
ஏற்கனவே உங்களது பகுதிகளுக்கு வெள்ளம் வந்திருந்தால்? உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேறுவது நல்லது.
ஆதார், ரேசன் கார்டு, பான் கார்டு, வீட்டுப்பத்திரங்கள் போன்றவற்றை பாதுகாப்பான இடங்களில் வைக்கவும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation