சிப்பாய் கலகம் தொடங்கி இந்தியாவின் சுதந்திரத்திற்கு அடித்தளமிட்ட வேலூரில் சுற்றிப் பார்ப்பதற்கு பல இடங்கள் உள்ளன. வேலூரை பற்றி யாரிடமாவது கேட்டால் அதை வெயிலூர் என குறிப்பிடுவார்களே என நீங்கள் கேட்கலாம். ஆம்... வேலூரில் 100 டிகிரி வெயில் என்பது சராசரி தான். ஆனால் அதே போல் குளிர்காலத்தில் வேலூர் மினி கொடைக்கானல் போல இருக்கும். வேலூரை சுற்றி ஏராளமான மலைகள் உள்ளன. இதன் காரணத்தால் நவம்பர், டிசம்பரில் வேலூரில் குளிர்ச்சியான சூழல் நிலவும். வேலூருக்கு சுற்றுலா செல்வதாக இருந்தால் நீங்கள் இந்த மாதங்களை தேர்ந்தெடுக்கலாம். வேலூர் கோட்டையில் தொடங்கி பல மலை கோயில்கள் இங்கு சுற்றுலா தலங்களாக விளங்குகின்றன. இதில் முக்கியமான 7 தலங்களை இந்த பதிவில் பார்ப்போம்...
வேலூர் கோட்டை
16ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த கோட்டை வேலூருக்கு அழகையும் பெருமையையும் சேர்க்கிறது. வேலூர் மாவட்டத்தின் சின்னமாக விளங்கும் இந்த கோட்டை 133 ஏக்கர் பரப்பளவில் ஒரு நுழைவு வாயிலோடு கட்டப்பட்டுள்ளது. 191 அடி அகலமும் 29 ஆழமும் கொண்ட அகழி வேலூர் கோட்டையை சுற்றி அமைந்திருக்கிறது. இந்தியாவிலேயே அகழியுடன் உள்ள கோட்டை என்றால் அது வேலூர் கோட்டை தான். இங்குள்ள மைதானத்தில் காலை நேரத்தில் நூற்றுகணக்கான இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவதை பார்க்க முடியும்.
ஜலகண்டேஷ்வரர் கோயில்
வேலூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோட்டைக்குள் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. ஜலகண்டேஷ்வரர் கோயில் விஜயநகர பேரரசின் கட்டட கலைக்கு சான்றாகும். கோவிலில் கண் கவர் கற்சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் உள்ளன. இங்கு சிவபெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த கோயில் வேண்டிக் கொண்டு கிணற்றில் நாணயங்கள் போட்டு அவை படிக்கட்டில் நின்றால் நீங்கள் நினைத்தது நிச்சயம் நடக்கும்.
ஸ்ரீபுரம் பொற்கோவில்
வேலூரில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் திருமலைக்கோடி எனும் ஸ்ரீபுரத்தில் பொற்கோவில் உள்ளது. இந்த கோயில் தங்கக் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. ஆயிரத்து 500 கிலோ தூய தங்க தகடுகளால் கோவில் வடிவமைக்கப்பட்டது. இங்கு ஸ்ரீ நாராயணி அருள் பாலிக்கிறார். 100 ஏக்கர் பரப்பளவில் நட்சத்திர வடிவத்திற்கு நடுவே கோயில் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பதிக்கு லட்டு போல் இங்கு சதுர வடிவில் ஸ்பெஷல் பிரசாதம் ஒன்று வழங்கப்படும்.
மார்க்கபந்தீஸ்வரர் கோயில்
வேலூரில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் விரிஞ்சிபுரம் எனும் இடத்தில் இந்த கோயில் உள்ளது. இங்கு மணி காட்டும் கல் ஒன்று உள்ளது. இந்த கோயிலின் பிரதான கடவுள் சுயம்பு லிங்கம் ஆவார்.
அரசு அருங்காட்சியம்
இந்த அருங்காட்சியகம் வேலூர் கோட்டையில் 1999ல் ஏப்ரல் மாதத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது. இதில் பண்டைய காலத்து சிற்பங்கள், வரலாற்று பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் புதை பொருட்களாக கண்டெடுக்கப்படும் அனைத்தையும் நாம் இங்கு பார்க்க முடியும்.
பாலமதி மலை முருகன் கோயில்
இந்த கோவில் வேலூரில் இருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த மலை சுமார் ஆயிரத்து 800 அடி உயரமும் எட்டு கொண்டை ஊசி வளைவுகளையும் கொண்டது. மலை உச்சியில் முருகன் கோவில் உள்ளது. வேலூரில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் முக்கியமான ஒன்று.
அமிர்தி உயிரியல் பூங்கா
இந்த உயிரியல் பூங்கா வேலூரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சுமார் 62 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. இங்கு மான்கள், கீரிப்பிள்ளை, நரிகள், குரங்குகள், சிவப்புதலைகிளிகள், ஆமைகள், மயில்கள், முதலைகள், காட்டுப் பூனைகள், மலைப்பாம்புகள் ஆகிய உயிரினங்கள் வாழ்கின்றன.
மாவட்ட அறிவியல் மையம்
வேலூரில் தமிழக அரசின் சார்பாக மாவட்ட அறிவியல் மையம் 2011ஆம் ஆண்டு பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது. இயற்பியல், அறிவியல், கண்டுபிடிப்பு அரங்கம், சுற்றுச்சூழல் மற்றும் தொழில் ஆகிய நான்கு அறிவியல் அரங்குகளுடன் மாவட்ட அறிவியல் மையம் நிறுவப்பட்டுள்ளது.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation